உதயநிதி ஸ்டாலினுக்கு மேடையிலேயே அமைச்சர் சேகர்பாபு வைத்த கோரிக்கை.. ‘முழுசா இறங்குங்க”- சூசக பேச்சு!
சென்னை : உதயநிதி ஸ்டாலின் முழு நேர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் பலரும் சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், தலைமையை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனத் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின், சினிமாவிலும் கவனம் செலுத்தி வருவதால், அமைச்சரவையில் இடம்பெற சில காலம் போகட்டும் என முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சினிமா வேண்டாம், முழு நேர அரசியலுக்கு வாருங்கள் என உதயநிதி ஸ்டாலினுக்கு சூசகமாக தெரிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

உதயநிதி ஸ்டாலின்
சென்னை துறைமுகம் பகுதி திமுக சார்பில் உடன்பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு 165 தையல் இயந்திரங்கள், 70 லேப்டாப், 550 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, 9 ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அமைச்சர் சேகர்பாபு
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழக முதல்வர் ஸ்டாலின் கனவு கண்டிருக்கும் வறுமை இல்லா தமிழகம், இல்லாமையை இல்லாமல் ஆக்கும் முயற்சிகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும்." என்றார்.

முழு நேர அரசியலுக்கு
மேலும் பேசிய அவர், "கழகத் தலைவரின் வார்ப்பு உதயநிதிக்கு எங்கள் தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் முழு நேர அரசியலுக்குத் திரும்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களை வரவேற்க பெரும் இளைஞர் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் போகும் இடமெல்லாம் பல்லாயிரக் கணக்கான மக்கள் உங்கள் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

234 தொகுதியுமே உங்களுடையது
சேப்பாக்கம்-திருவில்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி மட்டும் அல்ல; 234 சட்டமன்ற தொகுதியும் உங்கள் தொகுதி தான். ஆகவே இன்னும் வேகமாக நீங்கள் பயணிக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்கு முழுக்கு போட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு சூசகமாகத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications