ஸ்டாலினை அடுத்து உதயநிதி.. வார்ரூம்க்குள் நுழைந்து அதிரடி.. அடுத்தடுத்து நிகழும் ஆக்ஷன்
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று கொரோனா வார் ரூமிற்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அதிகாரிகளிடம் அங்கும் நடக்கும் செயல்பாடுகளை அனைத்தையும் கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிசைக்கு உதவுவதற்காக கொரோனா வார் ரூம் சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டது.
இங்கு கொரோனா நோயாளிகளுக்கு பெட் ஒதுக்குவது, ஆக்சிஜன் தேவையை கண்காணிப்பது, புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பது என்று பல முக்கிய விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போன் செய்து உதவி கேட்கும் மக்களுக்கு வார் ரூமில் உடனுக்குடன் உதவி செய்யப்பட்டு, தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

கொரோனா வார் ரூம்
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் இங்கு திடீர் விசிட் அடித்தார். வார் ரூம் எப்படி இயங்குகிறது என்று பார்த்துள்ளார். அதிகாரிகள் வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது முன்னறிவிப்பு இன்றி ஸ்டாலின் திடீர் விசிட் அடித்து சோதனை செய்தார். அவர்களின் பணியை மேற்பார்வையிட்டவர்.அங்கு வந்த ஒரு உதவி அழைப்பையும் கேட்டு பதில் அளித்தார். அத்துடன் அந்த பெண்ணுக்கு உதவி செய்யவும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

ஒருங்கிணைப்பு பணி
இந்நிலையில முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து அவரது மகனும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று கொரோனா வார் ரூமிற்கு சென்றார். இது தொடர்பாக உதயநிதி பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின்ள் தலைமையிலான அரசின் உன்னத முயற்சி COVID-19 கட்டளை மையம் (War room). தேனாம்பேட்டை DMS வளாகத்திலுள்ள இந்த மையத்துக்கு இன்று சென்றேன். தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை தேவைப்படுவோருக்கு.. மருத்துவமனை - படுக்கை - ஆக்சிஜன் வசதி போன்ற நிகழ் நேர தகவல்களை உடனுக்குடன் வழங்கி, சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளையும் மருத்துவர்களை கொண்டே மேற்கொள்ளும் இந்த மையத்தின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

தற்காலிக சிகிச்சை மையம்
கொரோனா வார் ரூம் பணிகளை பார்வையிட்டவர் அப்படியே நேராக தனது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு சென்றார். அங்கு ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்துக்கான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்தப்பணிகளை விரைந்து முடித்து கொரோனா தடுப்பு பணிக்கு ஒப்படைக்க வேண்டுமென அதிகாரிகளை வலியுறுத்தினார்.

கொரோனா சிகிச்சை பணிகள்
தொடர்ந்து ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், கொரோனா சிகிச்சை மற்றும் பொது சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணிகள் குறித்து மருத்துவ அதிகாரிகளை கேட்டறிந்ததுடன் அங்கு ஆய்வும் செய்தார். அப்போது அவருடன் தயாநிதி மாறன் எம்பியும் உடன் வந்தார்.

புதுப்பேட்டையிலும் ஆய்வு
இதேபோல் சென்னை புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணி 3-வது நாளாக இன்றும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார் . அங்கிருந்த குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் -பொதுமக்களிடம் இப்பணி எப்படி நடக்கிறது என்று கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications