உதயநிதி பக்காவா ‘மூவ்’ பண்றாராம்.. அதிமுக இழந்ததை கையில் எடுக்கும் திமுக.. சொல்றது யார்னு பாருங்க!
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பட்டியலின மக்கள் அதிமுகவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதனை லாவகமாக கைக்குள் கொண்டு வரவே திமுக முயற்சிக்கிறது. உதயநிதி அடுத்தடுத்து காய்களை அழகாக நகர்த்தி வருகிறார் என ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணிபுரிந்த பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது, சனாதனத்தை எதிர்க்கக் கூடாது, ஒழித்தே ஆக வேண்டும் எனப் பேசினார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது. உதயநிதியின் இந்தப் பேச்சு இந்துக்களுக்கு எதிரானது என பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, இந்துக்கள் மத்தியில் திமுகவுக்கு சிக்கலை உண்டாக்கக்கூடும் என்ற பேச்சுகளும் நிலவி வருகின்றன. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணியாற்றிய ஜெ.பூங்குன்றன், உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு திமுகவுக்கு வெற்றியைக் கொடுக்கும் எனக் கணித்துள்ளார்.
இதுதொடர்பாக பூங்குன்றன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், " "சனாதனம்" பற்றி பேசி தன்னுடைய பெயரை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். என்னை பொறுத்தவரை அவருடைய பேச்சும், நடவடிக்கையும் வெற்றி பெற எது தேவையோ? அதை நோக்கி திமுக-வை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என்றே நினைக்கின்றேன். எதை, எங்கே, எப்போது பேச வேண்டும் என்று அவர் திட்டமிடுவதாகவே தெரிகிறது.

திமுக தனது வெற்றிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய சகோதரர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர்களும் அவர்களை ஆதரிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இன்னும் கொஞ்சம் எளிதாக வெற்றி பெறுவதற்கு யாருடைய ஓட்டுகள் தேவை? அதை உணர்ந்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு வருகிறார். தாத்தாவின் அரசியல் பேரனுக்கு வருவதில் ஆச்சரியமில்லையே!
முக்குலத்தோர் ஓட்டுக்கள் அதிமுக பக்கம் அதிகமாக இருந்த காலம் போய் இனி அந்த ஓட்டுக்கள் சிதறித்தான் போகும் என்ற நிலை உள்ளது. பெரிய சமுதாயம் கோலோச்ச ஆரம்பித்தால் யார் விலகிப் போவார்கள்? இதற்கான பதிலை அரசியல் தெரியாத மனிதர் கூட சொல்லிவிடுவார். அப்படி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பட்டியலின மக்கள் அதிமுகவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதனை லாவகமாக கைக்குள் கொண்டு வரவே ஆளும் கட்சி முயற்சிக்கிறது. அது ஒரு சிறந்த முயற்சி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய நடவடிக்கைகளும், அவர்களுடைய செயல்பாடுகளும் அதை தெள்ளத் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. மாமன்னனில் ஆரம்பித்து அடுத்தடுத்து காய்களை அழகாக நகர்த்தி வருகிறார்.
பெரிய சமுதாயம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதிகளை மட்டுமே கைக்குள் கொண்டிருக்கிறது. ஆனால் பட்டியலின மக்கள் எல்லா தொகுதிகளிலும் வெற்றிக்கான வாக்குகளை தங்களிடத்தே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. ஆளும் கட்சி நடத்தும் சதுரங்க ஆட்டத்தில் எதிர்க்கட்சிகள் எப்படி காய்களை நகர்த்த போகின்றன?" எனக் கேள்வியுடன் தனது பதிவை முடித்துள்ளார் பூங்குன்றன்.












Click it and Unblock the Notifications