என்னை தூக்கி வளர்த்தவர்.. இன்றும் என்னை வழிநடத்துகிறார்.. தயாநிதி மாறனை புகழ்ந்து தள்ளிய உதயநிதி!
சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் என்னைத் தூக்கி வளர்த்தவர், இன்னும் என்னை வழி நடத்தி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் நடைபெற்றது. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தக் கூட்டத்திற்கு வந்துள்ள தயாநிதி மாறன் ஃபிட்டாக உடலை வைத்திருப்பவர். கூட்டங்களில் கொடுக்கும் டீ, பிஸ்கட்டை கூட சாப்பிட மாட்டார். என்னைத் தூக்கி வளர்த்தவர். இன்றும் என்னை வழிநடத்தி வருபவர். என்னை விளையாட்டு மேம்பாட்டு அணியின் தலைவர் எனக் கூறி பாரத்தை என் மேல் போட்டுள்ளார்.
வசதியான, செழிப்பான அணி விளையாட்டு மேம்பாட்டு அணி. கருணாநிதிக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் உண்டு. முதலமைச்சர் ஸ்டாலின் மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர். விளையாட்டை இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அணியில் பொறுப்பு கிடைக்காதவர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் மீது புகார் தெரிவிப்பார்கள். உங்களுக்கான ஒரே ஆதாரம் மினிட் புக். மினிட் புக் பராமரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கின்றனர். எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் வெல்ல முடியாது. அதற்கு காரணம் திமுக கட்டியுள்ள வலுவான அணியும், அந்த அணியை வழிநடத்தும் கேப்டன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தான்.
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் பரவாயில்லை. கொள்கைக்காக நிற்போம். சனாதனம் குறித்து பேசியதற்காக என் தலைக்கு ரூ.10 கோடி, ரூ.100 கோடி என வருவோர், போவோர் எல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததை நான் பேசவில்லை.
போலிச் செய்தி பரப்புவது தான் பாஜகவின் வேலை. என் மீதான தாக்குதல் தனிமனித தாக்குதல் இல்லை. கொள்கை மீதான தாக்குதல். 9 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவையே மாற்றுவேன் என பிரதமர் மோடி கூறினார். சொன்னதைச் செய்த அவருக்கு நன்றி" என்று பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications