"பழனிசாமி கார்ல ஏற போயிட்டேன்.. பார்த்தா ஜெயலலிதா போட்டோ".. அன்பில் மகேஷிடம் உதயநிதி சொன்ன மேட்டர்
எடப்பாடி பழனிசாமியின் காரில் ஏற முயன்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் தவறுதலாக ஏற சென்றதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.. இது வரும் மே மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் துறைச் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது...

எடப்பாடி பழனிசாமி கார்
இதில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் துறை சார்ந்த கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் நிறைவான பதிலளித்து வருகின்றனர்... மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். தினந்தோறும் இந்த கூட்டம் முடிந்த நிலையில், அமைச்சர்கள், உறுப்பினர்களை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் அவர்களின் கார்கள் தயாராக நிற்பது வழக்கம்.. அதுபோலவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கார், 4வது கேட் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும்...

4வது கேட்
அப்படித்தான், கடந்த 12-ம்தேதி கூட்டம் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி 4வது கேட் வழியாக வெளியே வந்தார். அப்போது, அங்கு கூடியிருந்த ஆங்கில டிவி செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபடி நடந்து வந்தனர். ஆனால், அதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சென்று கொண்டு இருந்தார்... அப்போது, தன்னுடைய கார் என்று நினைத்து தவறுதலாக, அங்கு நின்றிருந்த உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார்...

உதயநிதி கார்
அதன் பிறகு அவருடைய பாதுகாவலர்கள், சார் இது உங்க கார் இல்லை என்று சொன்னதும், ஸாரி என்று சொல்லிவிட்டு தன்னுடைய காரை நோக்கி சென்றார்... இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வைரலானது.. இந்த நிகழ்வைதான், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் நினைவுகூர்ந்து தற்போது பேசியுள்ளார்.. தமிழக சட்டப்பேரவைக்கூட்டத் தொடர் முடிந்து நேற்று வெளியேறும்போது, அமைச்சர் அன்பில் மகேஷ், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோருடன் உதயநிதி பேசிக் கொண்டே வந்தார்..

அன்பில் மகேஷ்
அப்போது, உதயநிதி, "3 நாட்களுக்கு முன்பு, இப்படித்தான் நானும் எடப்பாடி பழனிசாமி காரில் ஏற பார்த்தேன்.. காரின் முகப்பில் ஜெயலலிதா போட்டோ இருப்பதை பார்த்ததுமே சுதாரித்து கொண்டேன்" என்றார் உதயநிதி. இதை கேட்டதும் அன்பில் மகேஷ், "இப்படியே போனால், பக்கத்தில் இருப்பது யார் என்று கூட தெரியாமல், பேசிக்கொண்டே போக வேண்டியது தான்" என்று காமெடியாக சொன்னார்.. எடப்பாடி பழனிசாமி, உதயநிதி இருவரின் கார்களும் ஒரே மாதிரி இருப்பதால் இருவருக்குமே இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications