கலைஞர் படத்திறப்பு விழாவில் 2 முறை தேசிய கீதம் ஏன் பாடினார்கள் என்பது கூட விஜய்க்கு தெரியல-உதயநிதி
சென்னை: சட்டசபையில் கலைஞர் கருணாநிதி படத்திறப்பு விழாவின் போது இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதாக முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டாகால் உள்ளது என்றும், ஆளுநருக்கு கிடையாது என்றும் கூறிய உதயநிதி ஸ்டாலின், இப்படியொரு புரோட்டாகால் கூட முதல்வர் விஜய்க்கு தெரியாதது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, உடனடியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன்பின் ஆளுநர் உரை முடிவடைந்த பின்னரும் தேசிய கீதம் பாடப்பட்டது. 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டு தமிழக சட்டசபை மரபுக்கு மாறானது. இதுதொடர்பாக திமுக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இதற்கு முதல்வர் விஜய், 2021.. ஆகஸ்ட் 2.. நியாபகம் இருக்கா.. கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலைஞர் புகைப்படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டு, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நோட் திஸ் பாய்ண்ட் மான்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே என்று பேசி இருந்தார்.
முதல்வர் விஜய்யின் இந்த பேச்சிற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் படத்திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வந்தார்.. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டதே என்று முதல்வர் விஜய் பேசி இருக்கிறார். ஒரு முதலமைச்சருக்கு இந்த புரோட்டோகால் கூட தெரியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
ஏனென்றால் குடியரசுத் தலைவர் வரும் போது ஒரு புரோட்டோகால் இருக்கிறது. ஆனால் ஆளுநருக்கு எந்த புரோட்டோகாலும் கிடையாது. அந்த புரோட்டாகால் படிதான் அன்றைய நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஜனாதிபதி வரும் போது, மொத்த கட்டுப்பாடும் ஜனாதிபதி மாளிகை வசம் சென்றுவிடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனத்தை ஒப்பித்துவிட்டு போவது போன்று, இன்றைய உரையிலும் ஒப்பித்துவிட்டு முதல்வர் விஜய் சென்றுள்ளார். இசை வெளியீட்டு நிகழ்ச்சி, டிரெய்லர் நிகழ்ச்சி பாணியை கடைப்பிடிக்கிறார். சட்டப்பேரவையை சினிமா தியேட்டராக மாற்றிவிட்டனர். இன்று விசில் அடிக்கிறார்கள்.. விரைவில் அமைச்சர்கள் பாடல் போட்டு நடனமாடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications