செந்தில் பாலாஜி கைது.. உதயநிதி சவால்! மிசாவையே பாத்தோம்.. பாஜக மிரட்டலுக்கு திமுக அஞ்சாது என பேச்சு
சென்னை: செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது என்று தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் 2015 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளை வாங்கித் தர சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக அவர் மீதுபதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகின்றன. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த மே மாதம் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியது.
மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று காலை சோதனையை தொடங்கினர். தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நேற்று மதியம் 1.30 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை செய்தது. கரூரில் 6 இடங்களில் நடைபெற்ற சோதனை இரவு நிறைவடைந்தது.
15 மணி நேர சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் ரெய்டு முடிவடைந்து இருக்கிறது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைந்து இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரம் நடந்த சோதனை நள்ளிரவு 1 மணியளவில் நிறைவடைந்தது. செந்தில் பாலாஜியை கைது செய்வதாக அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதன் பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்த நிலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி காரில் படுத்து அழுது இருக்கிறார் செந்தில் பாலாஜி. இதனை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கொண்டு சென்ற அமலாக்கத்துறையினர் அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏவ வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவன், ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் காத்திருந்த உதயநிதி ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். அதன் பின்னர் காரில் புறப்பட்டு அவர் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “மிசாவையே பார்த்த கட்சி திமுக. பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார். ” என்றார்.












Click it and Unblock the Notifications