எங்கே போனாலும் கூட்டம் வருகிறது.. ராக்கெட் வேகத்தில் உயரும் உதயநிதி இமேஜ்.. திமுகவின் பக்கா பிளான்!
சென்னை: திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளும் பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. திமுகவினர் இடையே இந்த பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
2021ல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்காக கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக - திமுகவிற்கு இடையிலான மிகப்பெரிய போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் வலிமையான கூட்டணியை சமாளிக்க திமுக வியூகங்களை வகுத்து வருகிறது. திமுக வகுத்து இருக்கும் முக்கியமான வியூகம் .. உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின்
2021 சட்டசபை தேர்தலுக்கு திமுகவின் பிரச்சாரத்தை தொடங்கி வைத்ததே உதயநிதி ஸ்டாலின்தான் என்று கூற வேண்டும். திருக்குவளையில் இவர் தொடங்கிய விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரம்தான் திமுகவின் முதல் தேர்தல் பிரச்சாரமாக பார்க்கப்படுகிறது. முதல் நாள் பிரச்சாரத்தில் இருந்தே இவருக்கு அதிக அளவில் கூட்டம் கூடி வருகிறது.

கூட்டம் அதிகம்
திருக்குவளையில் உதயநிதி முதல்நாள் பிரச்சாரம் மேற்கொண்ட போதே அவருக்கு பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது. ஆனால் பிரச்சாரம் தொடங்கி சில நிமிடங்களில் உதயநிதி கைது செய்யப்பட்டார். அதன்பின் அடுத்தடுத்து நாகை, குத்தாலம் பகுதிகளிலும் வரிசையாக உதயநிதி கைது செய்யப்பட்டார். மூன்று நாள் பிரச்சாரத்தில் உதயநிதி மூன்று முறை கைது செய்யப்பட்டுவிட்டார்.

கைது
நேற்று கைது செய்யப்பட்ட உதயநிதி 11 மணிக்குதான் இரவில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இரவில் விடுதலை செய்யப்பட்ட பின்பும் உதயநிதி தனது பிரச்சாரத்தை இரவோடு இரவாக முடித்துவிட்டுதான் அங்கிருந்து சென்றார். நேற்று கைது செய்யப்பட்டு வெளியே வரும்போதே பெருமளவில் திமுக தொண்டர்கள் இவரை வரவேற்க்க காத்து இருந்தனர்.

மூன்று நாட்கள்
நேற்று என்று இல்லாமல் கடந்த மூன்று நாட்களாகவே இவரை பார்க்க பெரிய அளவில் கூட்டம் கூடி வருகிறது. மூன்று நாள் பிரச்சாரத்திலும் உதயநிதியை காண பெரிய அளவில் மக்கள் கூட்டம் வந்தது. லோக்சபா தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம் பெரிய அளவில் கை கொடுத்தது. திமுகவின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என்று அந்த கட்சி கருதுகிறது.

இப்போது
இந்த நிலையில் தற்போது சட்டசபை தேர்தலுக்கும் உதயநிதியை திமுக களமிறக்கி உள்ளது. அதிலும் உதயநிதியை முதல் ஆளாக களமிறக்கி மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை திமுக சோதனை செய்து வருகிறது. உதயநிதிக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை வைத்து திமுக வரும் நாட்களில் திட்டங்களை வகுக்கும்.

நேற்று ஸ்டாலின்
இதைத்தான் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின்.. ஒரு உதயநிதிக்கே இப்படி பயப்படுகிறீர்களே.. திமுக குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் உதயநிதி போன்ற தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய் வருவார்கள்.. அவர்கள் வரும் போது என்ன செய்வீர்கள் என்றும் கேட்டார். ஆம் உதயநிதியின் பிரச்சாரத்தை பார்த்துவிட்டு வரும் நாட்களில் அதற்கு ஏற்றபடி திமுக திட்டங்களை வகுக்கும்.

நம்பிக்கை
தற்போது உதயநிதிக்கு கூடும் கூட்டம் கட்சிக்குள் அவரின் இமேஜை ராக்கெட் வேகத்தில் உயர்த்தி உள்ளது. அவர் எங்கே போனாலும் கூட்டம் வருகிறது என்று கட்சியில் நினைக்கிறார்கள். அதேபோல் கட்சிக்கு வெளியிலும் உதயநிதி கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறார். இதை நினைத்துதான் திமுக அவரை களமிறக்கியது. ஆனால் திமுக முழுக்க முழுக்க உதயநிதியை மட்டுமே நம்பி இருக்க முடியாது.. இருக்காது. திமுகவின் பிரச்சார படை வரும் நாட்களில் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும்.

அதிமுக
இதற்கான பக்காவான பிரச்சார திட்டத்தை திமுக ஏற்கனவே வகுத்துவிட்டது. அதே சமயம் அதிமுக இதை எளிதாக சமாளிக்கும் என்றும் கூறுகிறார்கள். அதிமுகவில் நிறைய பேச்சாளர்கள் உள்ளனர். போதாக்குறைக்கு பாஜகவில் பெரிய சினிமா பட்டாளமே இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் அதிமுக - பாஜக தனது பிரச்சாரம் மூலம் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications