"வட இந்தியர்களுக்கு முன்னுரிமை.. தூதரக ஹெல்ப்லைன்கள் கூட வேலை செய்யவில்லை!" தமிழக மாணவி வேதனை
சென்னை: உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவி முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. கடந்த ஜன. மாதம் முதலே உக்ரைன் எல்லையில் ராணுவத்தைக் குவித்து வந்த போதிலும் முழு வீச்சில் போரை ஆரம்பிக்கும் என யாரும் நினைக்கவில்லை.
புதினின் இந்தப் போர் நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த உலக நாடுகள், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.

உக்ரைன் போர்
இந்தப் போர் காரணமாக ஏற்கனவே உக்ரைன் நாட்டில் வான்வழி மூடப்பட்டுள்ளது. பயணிகள் விமானங்கள் எதுவும் கடந்த 10 நாட்களாகவே இயக்கப்படவில்லை. இதனால் அங்குச் சிக்கியுள்ள வெளிநாட்டினர் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய சமயத்தில் மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் உட்பட மொத்தம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்குச் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியானது.

மாற்று வழிகள்
வான்வழி மூடப்பட்ட நிலையில், மாற்று வழிகளைப் பயன்படுத்தி உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளில் இறங்கியது வெளியுறவுத் துறை. அதன்படி ஹங்கேரி, ருமேனியா நாடுகளுக்குச் சாலை வழியாக வருமாறு இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியது. பின்னர் அந்த நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் பொதுமக்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

எல்லையில் சிக்கல்
இருப்பினும், இதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவத்திற்கு இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் சாலை வழியாக எல்லைக்கு வருவதற்குள் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர். மேலும், எல்லையிலும் உக்ரைன் காவலர்கள் இந்திய மாணவர்களை அனுமதிக்க மறுப்பதாகவும் சில இடங்களில் மாணவிகளைத் தாக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வட இந்தியர்களுக்கு முன்னுரிமை
இத்தனை பிரச்சினைகளைத் தாண்டி ஒரு வழியாக அண்டை நாடுகளுக்கு மாணவர்கள் வரும் போதிலும், அங்கும் வட இந்தியா மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே உக்ரைனில் இருந்து பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி சொந்த ஊர் திரும்பிய கொடைக்கானலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரது மகள் அனுஷியா இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பு
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அனுஷியா, "நான் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தேன். ரஷ்யா திடீரென தாக்குதலை ஆரம்பித்ததால் உடனடியாக எங்களால் நாடு திரும்ப முடியவில்லை. முதலில் அங்குள்ள பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்தோம். அங்கு என்னைப் போலவே சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்தோம்.

வட இந்தியர்களுக்கு முன்னுரிமை
இந்திய தூதரகம் சார்பில் 10 அவசர எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதில் ஒன்று கூட வேலை செய்யவில்லை. இந்தியத் தூதரகம் அதிகாரிகள் கூட வட இந்திய மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கிறார்கள். அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் மட்டுமே உள்ளதால் தமிழ் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொரு தகவலையும் இந்தி-ஆங்கிலம் தெரிந்த நபர்களிடம் கேட்க வேண்டிய சூழல் இருந்தது. இன்னும் கூட பல தமிழக மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications