இனி தினமும் 3 முறை வாட்டர் பெல்.. பள்ளிகளில் வரும் புதிய நடைமுறை.. பின்னணியில் உள்ள காரணம்!
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் அருந்துவதற்கு வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி காலை, மதியம் மற்றும் மாலை என்று 3 வேளைகளில் வாட்டர் பெல் அடிக்கப்படவுள்ளது. எந்தெந்த நேரத்தில் இந்த வாட்டர் பெல் அடிப்படவுள்ளது என்பதை பார்க்கலாம்.
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொடுத்து அனுப்பினாலும், பெரும்பாலான குழந்தைகள் பாதி வாட்டர் பாட்டிலை கூட குடிக்க மாட்டார்கள். சாப்பிடும் நேரத்தை கடந்து குழந்தைகள் வாட்டர் பாட்டில் பக்கமே செல்வதில்லை. சுமார் 8 மணி நேரத்திற்காக மேலாக பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு, தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.

இதன் காரணமாக வெளிநாடுகளில் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் என்று அறிமுகம் செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வாட்டர் பெல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் கேரளாவில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். வாட்டர் பெல் திட்டம் என்பது குழந்தைகள் காலை, மதியம் மற்றும் மாலை என்று 3 வேளைகளிலும் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்தாகும். அதற்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்படும்.
ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வகுப்புச்சூழல் பாதிக்கப்படாத வகையில் ஒரு நாளில் 2 முதல் 3 முறை வாட்டர் பெல் அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி காலை 11 மணியளவிலும், மதியம் 1 மணியளவிலும், மாலை 3 மணியளவிலும் வாட்டர் பெல் அடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கற்றல் திறன் பாதிக்கப்படும். இதனால் வாட்டர் பெல் திட்டத்தின் மூலமாக மாணவர்கள் போதுமான அளவி தண்ணீர் குடிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications