மதுரையில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்.. சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு சொன்ன தகவல்!
சென்னை: மதுரையில் ரூ.500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதேபோல் மதுரைக்கு அருகில் உள்ள நகரங்களை மேம்படுத்தினால் மதுரையில் இட நெருக்கடி குறையும் என்றும், இதனை உடனடியாக செயல்படுத்த நிதி நிலைமைக்கு ஏற்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்ட, ஆளுநர் ரவி உரையுடன் திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பல வார்த்தைகளை விடுத்தும், சில பகுதிகளை சேர்த்தும் வாசித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் இருக்கை விவகாரம், ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவதை கண்டித்து அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றம் வந்தனர்.

அமைச்சர் கே.என்.நேரு பதில்
இதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் புருஷோத்தனம் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பரிசீலனையில் உள்ளது.

ரூ.400 கோடி செலவு
திருமங்கலத்தில் முழுமையாக புதிதாக பாதாள சாக்கடை அமைக்க ரூ.400 கோடி செலவாகும். தொடர்ந்து அதை பராமரிக்க வருவாய் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். மேலும், 21 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 40 கிலோ வாட் திறன் கொண்ட கசடுக்கழிவு அப்புறப்படுத்த பணிகள் நடந்து வருகிறது. கழிவுநீரில் ஏற்படும் கசடுகழிவுகளை தனியாருடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நிதி நிலைமை
அதேபோல், மதுரையை போன்று அருகில் இருக்கும் நகரங்களில் மாநகராட்சி போன்று வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரைக்கு அருகில் உள்ள நகரங்களை மேம்படுத்தினால் மதுரையில் இட நெருக்கடி குறையும் என்பதால் இதனை உடனடியாக செயல்படுத்த நிதி நிலைமைக்கு ஏற்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

21 மாநகராட்சி
அதேபோல், மதுரையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் புதிய பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் தளபதி கோரிக்கை வைத்தார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, 21 மாநகராட்சிகளில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒசூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பதில் அளித்தார்.

மதுரையில் திட்டம்
அதேபோல், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல் படுத்தப்படஉள்ளது. குறிப்பாக மதுரையில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications