மிகப்பெரிய பிரச்சனையில் இந்தியா.. ஈரான் விஷயத்தை விடுங்க! இதை கவனிக்காம விட்டா ரொம்ப டேஞ்சர்
சென்னை: ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. நாடு முழுவதும் இதுதான் இப்போது ஹாட் டாபிக். ஆனால், இதைவிட மிகப்பெரிய பிரச்சனையில் இந்தியா சிக்கியிருப்பதாக, வெளியாகியிருக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியே போனால், இலங்கையில் நடந்ததை போல இங்கும் நடக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த எச்சரிக்கைக்கு காரணம், அசிம் பிரேம்ஜி வெளியிட்ட டேட்டாதான். 'இந்திய உழைப்பு சூழல் 2026' என்கிற தலைப்பில், வேலையின்மை குறித்த டேட்டாவை பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.

அதில், இந்தியாவில் வேலையில்லா இளைஞர்கள் எண்ணிக்கை எவ்வளவு? என்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் ஷாக் கொடுத்திருக்கின்றன.
கசப்பான உண்மை
வேலையின்மை: இந்தியாவை பொறுத்தவரை, கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருந்தாலும், அதற்கேற்ற வேலைகள் உருவாக்கப்படவில்லை. அதாவது நாடு முழுவதும் 15-25 வயது வரை உள்ள இளைஞர்களில், 40% பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று அறிக்கை தெரிவித்திருக்கிறது. அதுவே, 25-29 வயது கொண்ட இளைஞர்களில், 20% பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
பட்டதாரிகளின் நிலை: படித்த பட்டதாரிகள் என்று எடுத்துக்கொண்டால், 20-29 வயதுடைய 6.3 கோடி பட்டதாரிகளில், சுமார் 1.1 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். கல்வி கற்றும் அதற்கேற்ற வேலை இல்லாதது, திறன் வீணடிப்பு சூழலை காட்டுகிறது. வேலை தேடும் ஆண்களில் சுமார் 50% பேருக்கு ஓராண்டுக்குள் ஏதோ ஒரு வேலை கிடைக்கிறது. ஆனால், அதில் வெறும் 7% பேருக்கு மட்டுமே நிரந்தரமான மாத சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது.
கல்வியும் வேலைவாய்ப்பும்
இந்தியாவில் கடந்த காலத்தை விட, இப்போது கல்வி கற்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 1983ல் கல்வி பயில 38%பெண்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். ஆனால், 2023ல் சுமார் 68% பெண்கள் கல்வி பயில ஆர்வம் காட்டுகிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை 73% ஆக அதிகரித்திருக்கிறது.
கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை
தாராளமயமாக்கலுக்கு பிறகு, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,644-லிருந்து 69,534 என பிரமாண்டமான அளவில் வளர்ந்திருக்கிறது. தனியார் கல்லூரிகளை பொருத்தவரை, ஒரு ஆசிரியருக்கு 28 மாணவர்கள் இருக்கின்றனர். அதே அரசு கல்லூரி என எடுத்துக்கொண்டால் 47 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். இது கல்வியின் தரத்தின் மீது கேள்வியை எழுப்புகிறது.
கல்வியை கைவிடும் ஆண்கள்
இது ஒருபுறம் எனில், மறுபுறம் கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு, கல்வி கற்பதிலிருந்து ஆண்கள் கணிசமான அளவில் வெளியேற தொடங்கியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்வி கற்கும் ஆண்களின் எண்ணிக்கை 38%லிருந்து 34% ஆக குறைந்திருக்கிறது. கல்வியை பாதியில் கைவிட்டவர்களில் 72% மாணவர்கள் சொல்லும் காரணம், குடும்ப வருமானத்திற்கு உதவ வேண்டும் என்பதுதான்.
பாசிட்டிவான விஷயம்
இத்தனை நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும், கொஞ்சம் பாசிட்டிவ் விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது, முன்தாக தலித் மற்றும் பழங்குடியின மக்கள் தோல், காலணி தொழில்களில் மட்டும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், இப்போது, காகிதம், வாகன உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் துறையில் அதிக அளவில் இணைந்திருக்கிறார்கள். அதேபோல இளம் பெண் பட்டதாரிகள் ஆண்களுக்கு இணையான ஊதியம் பெறும் அளவுக்கு நிலைமை பாசிட்டிவாக மாறியிருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications