கேஸ் தந்த கிடுக்கிப்பிடி! சொத்து விவர விவகாரத்தில் அதிமுக ஜெயக்குமார், சி.வி.சண்முகம் பெரும் நிம்மதி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் ரிசல்ட்டை நோக்கி ஒட்டுமொத்த வாக்காளர்களும் உள்ளனர்.. இந்நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளிகளான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் நீதிமன்ற விசாரணையின் பின்னணி குறித்த தகவல்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே மனுக்கள் பெறப்பட்டன.

தேர்தல் ஆணையம்
இதில் ஒட்டுமொத்தமாக 7,599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற தீவிர பரிசீலனைக்குப் பிறகு 4,918 வேட்புமனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. பல்வேறு குறைபாடுகள் காரணமாக 2,365 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 11 பேர் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்து.
இப்படிப்பட்ட சூழலில் சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வேட்புமனுவில் சொத்து விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ராயபுரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், "கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் ஜெயக்குமார் தனது சொத்து மதிப்பை 39 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது 2026-ம் ஆண்டு வேட்புமனுவில் 70 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் எனப் பதிவிட்டுள்ளார். இந்தச் சொத்து அதிகரிப்பு குறித்து முறையான விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே, இது குறித்து தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார்.
சி.வி.சண்முகத்தின் சொத்து சர்ச்சை
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்துக்கு எதிராகவும் வாக்காளர் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
2021-ல் 12 லட்சத்து 8 ஆயிரத்து 409 ரூபாயாக இருந்த அவரது அசையும் சொத்துக்கள், தற்போது 60 லட்சத்து 64 ஆயிரத்து 152 ரூபாயாக உயர்ந்துள்ளது. 5 வருட கால எம்.எல்.ஏ. பதவிக் காலத்தில் இவ்வளவு அபரிமிதமான வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும், அவரது ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும்போது இந்தச் சொத்து உயர்வு நியாயமானதாக இல்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சென்னை ஹைகோர்ட் அதிரடி
இந்த 2 முக்கிய வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதை முன்மாதிரியாகக் குறிப்பிட்டனர். அதன் அடிப்படையில், ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய 2 பேருக்கும் எதிரான இந்த மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்..
முன்னதாக, தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் வேட்புமனுவில் மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், அதுகுறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அதனையும் தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் மூலம் தேர்தல் களத்தில் இருந்த சட்டச் சிக்கல்கள் இவர்கள் 3 பேருக்குமே நீங்கியுள்ளது..!!!













Click it and Unblock the Notifications