"திருமாவளவனை போட்டு தள்ளுவோம்".. மனுஸ்மிருதி Vs திருமா.. 2020ஐ உலுக்கிய மறக்க முடியாத சர்ச்சை பேச்சு
திருமாவளவனின் மனு தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு, இந்த வருடம் பரபரப்பை தந்துவிட்டது
சென்னை: இந்த வருடம் தமிழக அரசியலில் எத்தனையோ பரபரப்புகள், திருப்பங்கள் நடந்திருந்தாலும், மிகப்பெரிய சலசலப்பை புரட்டி போட்டது திருமாவளவனின் மனுதர்மம் குறித்த சர்ச்சை பேச்சும், அதனையொட்டி பாஜகவினர் காட்டிய ரியாக்ஷனும் என்பதை மறுக்க முடியாது.
"மனுதர்மம் இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என்கிறது" என்று விசிக தலைவர் திருமாவளவன் ஒரு கருத்து தெரிவித்திருந்தார்... பெண்களை விபச்சாரிகளாக மனுதர்மம் சித்தரிக்கிறது, அதை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டத்திலும் விசிக குதித்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் திருமாவுக்கு ஆதரவு கரங்கள் தொடர்ந்து நீட்டப்பட்டன.
ஆனால், "பெண்களை" திருமாவளவன் விபச்சாரிகள் என பேசிவிட்டதாக இந்து மத ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.. குறிப்பாக பாஜக இதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டது. தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் திருமாவளவனின் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. பல இந்து பெண்கள் வீடியோ போட்டு திருமா இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுக்க ஆரம்பித்தனர்.
போராட்டம்
இந்த சமயத்தில்தான் காங்கிரஸிலிருந்து அப்போதுதான் பாஜகவுக்கு தாவியிருந்த குஷ்பு இந்த விஷயத்தை கையில் எடுத்தார்.. "பெண்களை திருமா இழிவுபடுத்தி இருக்கிறாரே, இதை திமுக கண்டிக்காதா, காங்கிரஸ் கண்டிக்காதா" என்று கேள்விகளை கேட்டார். குஷ்பு திருமா மீது பாய்வதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது.
குஷ்பு
15 வருடத்துக்கு முன்பு கற்பு குறித்து சர்ச்சையாக பேசியதை அன்றைய விசிகதான், பெரிதுபடுத்தி தன்னை கதறி அழுது மன்னிப்பு கேட்கும்படி செய்துவிட்டது என்பதில் குஷ்பு உறுதியாக இருந்தார்.. அதனால்தான், திருமாவுக்கு எதிரான போராட்டத்தை தானே முன்னெடுத்தார்.. குஷ்பு நினைத்திருந்தால், தமிழகத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால், திருமாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சிதம்பரத்தை டார்கெட் செய்தார்.. அந்த போராட்டத்தை அரசு நடத்தவிடாவிட்டாலும், குஷ்புவின் காழ்ப்புணர்ச்சி வெளிப்பட்டது.
கொலை மிரட்டல்
இந்த விஷயத்தில் திருமாவும் நிறைய சர்ச்சைக்கு உள்ளானார் என்பதை மறுக்க முடியாது.. "திருமாவளவனை போட்டுட்டுதான் ஒதுங்குவோமே தவிர.. பார்த்துட்டு ஒதுங்கமாட்டோம்" என்று அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதர் மிரட்டல் விடுத்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. எனவே, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி பேசியது எந்த அளவுக்கு அவருக்கு வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் என்று தெரியவில்லை.
கூட்டணி
அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் திருமா இருப்பதால், திமுகவுக்கு சில தர்மசங்கடத்தையும் இந்த பேச்சு ஏற்படுத்தியது.. திருமாவளவன் கருத்தை திமுக ஆமோதித்தால், "தங்கள் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்துக்கள்" என்று சொன்ன ஸ்டாலின், இந்துக்களின் எதிர்ப்பை கடுமையாக சம்பாதிக்க வேண்டும். இந்த கருத்தை எதிர்த்தால் நாத்திகர்களின், திராவிடர்களின், குறிப்பாக சிறுபான்மையினரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டது.
பிரச்சனைகள்
அதுமட்டுமல்ல, எப்போது முடிந்துபோன மனுதர்மத்தை ஏன் திருமா இப்போது கிண்டி எடுக்க வேண்டும்? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, இதை பற்றி ஏன் பேச வேண்டும்? தமிழ்நாட்டில் 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்களை எந்த உரிமையும் படு கேவலமாக நடத்தும்போது, அதை ஏன் யாருமே கேட்க முன்வரவில்லை? ஏன் ஒருவரும் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? என்ற முணுமுணுப்புகளும் பரவலாக எழுந்தன.
மறக்க முடியாது
ஆக, தோண்டி புதைத்த ஒரு விஷயத்தை எடுத்து வைத்து கொண்டு பேசி, சர்ச்சையாக்கி, ஆர்ப்பாட்டம் நடத்தி, இந்து மக்களின் எதிர்ப்பு, தலித் மக்களின் அதிருப்தி, குஷ்புவின் பழிவாங்கல், என பலவிஷயங்களை திருமாவின் இந்த மனுதர்ம பேச்சு தாங்கி வந்தது என்பதை மறுக்க முடியாது.