ராஜ்நாத் சிங் + முருகன் + அண்ணாமலை.. கருணாநிதி நினைவிடத்தில் பாஜக தலைகள் மரியாதை.. பூரித்த ஸ்டாலின்
சென்னை: கருணாநிதி நுற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து கையெடுத்து கும்பிட்டு வணங்கினார். அப்போது அவர் அருகே முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி இருந்தனர். பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
திமுகவின் நீண்டகால தலைவராக இருந்தவர் கருணாநிதி. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான இவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி மறைந்தார். அப்போது அவருக்கு வயது 94. வயது முதிர்வு தொடர்பான உடல்நல குறைவால் கருணாநிதி காலமானார்.

இந்நிலையில் தான் கருணாநிதியின் நூற்றாண்டு விழா என்பது கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை குறிக்கும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும். இதையடுத்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை குறிக்கும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் கருணாநிதி நினைவு நாணயத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியிடத் திட்டமிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அனுமதியில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி வழங்கினார். இதையடுத்து இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். இதற்காக ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்தார்.
அதன்பிறகு ராஜ்நாத் சிங் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினார். அப்போது ராஜ்நாத் சிங் உடன் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, மத்திய இணையமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள் உடனிருந்தனர். அதன்பிறகு ராஜ்நாத் சிங் அங்குள்ள கருணாநிதி நூற்றாண்டு நினைவு அருங்காட்சியத்தை பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications