கல்வி நிதியில் பழிவாங்கிய பாஜக.. தமிழக நிதியை பிற மாநிலங்களுக்கு கொடுப்பதா? கொந்தளித்த மு.க.ஸ்டாலின்
சென்னை: மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பறிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கான நிதியை பறித்து மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளதாக கூறியுள்ள அவர், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.எஸ்.ஏ கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தனது பங்களிப்பாக கடந்த நிதியாண்டில் ரூ.2,121 கோடி நிதி அளித்தது. தற்போது 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்கி இருந்தது. ஆனால் மத்திய அரசின் நிபந்தனையை தமிழக அரசு ஏற்காததால், தமிழ்நாடு கல்விக்கான நிதி மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி இருக்கிறது. மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்தால் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழக அரசு தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. தற்போது எம்பி ஸ்ரீ திட்டத்தில் இணையாததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியது பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே கிடையாது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை ஏற்காததால், தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு பறித்து, மற்ற மாநிலங்களுக்கு வழங்கி இருக்கின்றனர். இதுவரை எந்தவொரு அரசும் அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான நிதியை முடக்கியது இல்லை. தங்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளது.
பாஜக அரசின் இந்த செயல் தமிழ்நாடு மீதான அரசியல் பழிவாங்கலுக்கு கல்வி உரிமையை நெரிக்கும் இரக்கமற்ற ஒன்று. தமிழ்நாடு மீதான வெறுப்பின் முகமே மாணவர்களுக்கான நிதியை பறித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு மீண்டும் பாஜக அரசு அநீதியை இழைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications