ரூ.45,000 கோடி குறிஞ்சாங்குளம் கிராபைட் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு! ‘உரிமை’ கோரும் பாஜக, மதிமுக!
சென்னை: தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் மற்றும் சுற்று வட்டாரங்களில் கிராபைட் உள்ளிட்ட தாது மணல் எடுக்க வகை செய்யும் ரூ45,000 கோடி திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்ய காரணம் யார் என்பதில் மதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் போட்டி போட்டு உரிமை கோருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு முன்னரே குறிஞ்சாங்குளத்தில் கிராபைட் வெட்டி எடுக்கும் முயற்சிகளுக்கு மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முன் முயற்சியில் அப்பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
தென்காசி மாவட்ட ம் திருவேங்கடம் தாலுகாவில் உள்ளது குறிஞ்சாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் கிராபைட் உள்ளிட்ட தாது மணல் வெட்டி எடுக்க ரூ45,000 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக மின் ஏலமும் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக தற்போது இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட தாங்கள்தான் காரணம் என மதிமுக, பாஜக உரிமை கோருகின்றன.

துரை வைகோ: மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி வெளியிட்ட அறிக்கையில், கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திமுக முதல் இயக்கமாக களம் அமைத்து போராடும் என ஒன்றிய அரசை எச்சரித்து முதன் முதலில் 02.12.2023 அன்று விரிவான அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
விவசாயம் அழியும்: கிராஃபைட் கனிமம் எடுப்பதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் அந்தப் பகுதியில் விவசாயம் முற்றாக அழியும் நிலை ஏற்படும். நிலத்தடி நீர் மட்டமும் குறையும்.
கிராஃபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழும். மேலும் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.
மதிமுக குரலை ஏற்று..: மறுமலர்ச்சி திமுகவின் குரலுக்கு செவி சாய்க்கின்ற வகையில் தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் பகுதியில் கிராஃபைட் கனிமத்தை எடுப்பதற்கான மின் ஏலத்தை ரத்து செய்த ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை மறுமலர்ச்சி திமுக சார்பில் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வரவேற்பு: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழக அரசும் இதற்கான ஒப்புதலை வழங்கியிருந்ததாக அறிகிறோம். ஆனால், குறிஞ்சான்குளம் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், தங்கள் பகுதியில் தாது மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கங்களிற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டபோது அதை ரத்து செய்திடத் தமிழக பாஜக எடுத்த முன்னெடுப்பைப் போல, இந்த கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம்.
அமித்ஷாவுடனான சந்திப்பு: மூத்த அரசியல் தலைவரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, பொதுமக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, குறிஞ்சான்குளம் பகுதியில், தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முன் முயற்சியில் இந்த கிராபைட் தொழிற்சாலைக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்களை கிராம மக்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications