ஓமிக்ரான் அச்சம்.. இந்த 3 மாவட்டங்களில் உயரும் கேஸ்கள்.. தமிழக அரசுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்
சென்னை: நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சம் பரவிவரும் நிலையில், பயணிகள் வருகையின் கண்காணிப்பைத் துரிதப்படுத்தத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சக முதன்மை செயலாளருக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டது. கடந்த காலங்களில் ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகளே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் இந்த முறை உலக நாடுகள் அனைத்தும் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்கனவே தங்கள் எல்லைகளை முழுவதுமாக மூடுவதாக அறிவித்துவிட்டன.
ஹஜ் பயணத்திற்கான சென்னை புறப்பாடு; அண்ணாமலை பிரச்சனையை திசைதிருப்புகிறார் சு.வெங்கடேசன் விமர்சனம்
ஓமிக்ரான் கொரோனா
அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மற்ற பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் ஆபத்தான நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இருந்தாலும் கூட, ஓமிக்ரான் வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3 பேருக்கு பாதிப்பு
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய இரண்டு பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து. இந்தச் சூழலில் ஜிம்பாவே நாட்டில் இருந்து வந்த ஒருவருக்குக் குஜராத் மாநிலத்தில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதுவரை 3 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மத்திய அரசு கடிதம்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த நவ 27ஆம் தேதி, அனைத்து மாநில சுகாதார அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 30 நாட்களில் மட்டும் 23, 764 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
3 மாவட்டங்கள்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலர் ராஜேஷ் பூஷன் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில், "அதிகபட்சமாகச் சென்னையில் 845 பேருக்கும், திருவள்ளூரில் 117 பேருக்கும், வேலூரில் 93 பேருக்கும் என கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவும் அச்சமானது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில், பயணிகளின் வருகையைத் துல்லியமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை தேவை
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கண்டிப்பாக எடுக்க வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்புகள் குறித்து, அரசு அறிவுறுத்தி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்வது, தடுப்பூசிகள் செலுத்துவது, சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். மத்திய அரசானது அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது" என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.