கை குலுக்கிய கையோடு.. எடப்பாடி வீட்டில் கை நனைத்த அமித் ஷா!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி உறுதியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து அளிக்கிறார். இதில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்தது. இரு கட்சிகளும் தனியாக போட்டியிட்ட நிலையில், திமுக கூட்டணி மொத்தமாக 39 தொகுதிகளிலும் அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

அப்போது அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை ஒருமனதாக தேர்வு செய்ய காரணமாக அமைந்துள்ளார். தற்போது அதிமுக - பாஜக கூட்டணியையும் உறுதி செய்துள்ளார்.
அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், வென்றால் இணைந்தே ஆட்சி செய்வோம் என்று அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் 2021ல் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து செயல்பட்டதை போல், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே இரு கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.
தற்போது அமித் ஷா செய்தியாளர்களை சந்திப்பு முடிவடைந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில், அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனையொட்டி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications