தேமுதிகவிடம் கூட்டணி பேசும் எல்.முருகன்! ரகசியத்தை உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்
சென்னை: தேமுதிகவிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: செங்கோட்டையனின் நிலை தாழ்ந்துவிட்டதை கண்டு கண்ணீர் வடிக்கிறோம். அவரது நிலை யாருக்கும் வரக் கூடாது.

எங்களிடம் இருந்த போது முதலிடத்தில் இருந்த பெரிய மனிதரை 5-ஆவது இடத்தில் உட்கார வைத்துள்ளனர் என்றார். அப்போது தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் "தேமுதிகவுடன் தேசிய பாஜக தலைமையும் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
எங்களிடம் அன்பாக இருப்பவர்களிடம் நாங்கள் (அதிமுக) பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அவர்களிடம் (பாஜக) அன்பாக இருப்பவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலரும், பாஜகவை நம்பி சிலரும் கூட்டணிக்கு வருகிறார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார். அப்போது அதிமுகவுடன் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் தேமுதிகவுக்கு மனக்கசப்பு இருந்ததால் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்கு யார் சமைத்தால் என்ன (யார் பேசினால் என்ன) சாப்பாடும் கூட்டும் நம் இலைக்கு வந்தால் போதும். சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் கேட்பதால் அவர்களிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாஜகவிடம் மத்திய அமைச்சர் பதவியை தேமுதிக கேட்டு வருவது ஊர்ஜிதமாகிவிட்டது. கூட்டணி பேரம் பேசுவதாக தேமுதிக மீது விமர்சனம் எழுந்த போது பிரேமலதா கூறுகையில், நாங்கள் யாரிடமும் கூட்டணி பேரம் பேசவில்லை. யாரிடமும் போய் எங்களுக்கு இவ்வளவு தாருங்கள் என கேட்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபைத் தேர்தல்கள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் தேர்தலை திமுக, அதிமுக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டியாக எதிர்கொள்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் உள்ளன.
மறுபுறம், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க வெற்றி பெறாத தேமுதிக, இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறும் நோக்கில் அதிமுக மற்றும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தேமுதிக 14 தொகுதிகளை கோர, இரு கட்சிகளும் அவற்றை ஒதுக்குவது கடினம் என மறுத்துள்ளன. அதிமுக 8 இடங்களையும், திமுக 6 இடங்களையும் தேமுதிகவுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன.
ஆனால், தேமுதிகவின் கூட்டணி முடிவாகாததற்குப் பின்னணியில் ஒரு திருப்பம் உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைய, 14 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டுடன் மத்திய அமைச்சரவையில் ஓர் இடத்தையும் தேமுதிக கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications