நடிகர் விஜய்.. பேரை கேட்ட உடனே தலை தெறிக்க ஓடுறாரே மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி?
சென்னை: லோக்சபா தேர்தல் வரலாற்றில் கேரளாவில் பாஜகவுக்கு முதல் கணக்கைத் தொடங்கிக் கொடுத்தவர் நடிகர் சுரேஷ் கோபி. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். மத்திய அமைச்சராக சென்னைக்கு வருகை தந்த நடிகர் சுரேஷ் கோபி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு விருட்டென காரில் ஏறிச் சென்றார்.
கேரளாவில் இடைவிடாமல் தேர்தல்களில் போட்டியிட்டு லோக்சபா தேர்தலில் வென்றுவிட்டார் நடிகர் சுரேஷ் கோபி. தற்போது மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். நடிகர் சுரேஷ் கோபிக்கு பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரான பின்னர் இன்று சென்னைக்கு முதல் முறையாக வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் மத்திய அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி. அப்போது, பெட்ரோலியத்துறை என்பது டெக்னிக்கலானது. காவிரி படுகை தொடர்பான திட்டங்களும் இருக்கிறது. ஆனால் முதலில் நான் பெட்ரோலியத்துறை குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். சுற்றுலாத்துறை அப்படி இல்லை.. எந்த எல்லைக்கும் போக முடியும். அப்படியானது பெட்ரோலியத்துறை இல்லை என விளக்கம் அளித்தார். மேலும் அரசியல் ரீதியான கேள்விகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் நடிகர் சுரேஷ் கோபி கேட்டுக் கொண்டார்.

அப்போது ஒரு செய்தியாளர், நடிகர் விஜய் என உச்சரித்தார். அவ்வளவுதான். விருட்டென எதுவுமே சொல்லாமல் அந்த செய்தியாளர் சந்திப்பையே நிறுத்திவிட்டு காரில் ஏறச் சென்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி. அப்போது சென்னை பற்றி சொல்லுங்கள் என மற்றொரு செய்தியாளர் கேட்க, எனக்கு வாய்ப்பு கொடுத்த இடம். நான் தூங்க இடம் தந்தது சென்னை என நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்திருந்தார் நடிகர் விஜய். மாநில உரிமைகள் குறித்து முழக்கம் எழுப்பினார். மத்திய அரசை 4 முறை "ஒன்றிய அரசு" என குறிப்பிட்டுப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications