17 கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிலங்கள் ஏலம்: லாபகரமான சொத்து மீட்பா அல்லது தேர்தல் கால அவசர விற்பனை?
சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்குச் சொந்தமான உபரி சொத்துக்களை ஏலம் விட முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.. அதேசமயம், தேர்தல் நேரத்தில் ஏலம் விடுவதில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டப்பட வேண்டும்? என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.. இங்கே அதன் விவரத்தை சுருக்கமா கபார்ப்போம்..
பொதுவாக ஒரு நிறுவனம் அல்லது அரசு அமைப்பு தன்னிடம் உள்ள பயன்படுத்தப்படாத அசையா சொத்துக்களை ஏலம் விடுவதற்கு பல்வேறு நிதி சார்ந்த மற்றும் நிர்வாக ரீதியான காரணங்கள் உள்ளன.

கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்
குறிப்பாக அமைப்புகளின் முடங்கிக்கிடக்கும் மூலதனத்தை மீட்டெடுத்து, அதை மீண்டும் சுழற்சிக்கு கொண்டு வருவதே ஏலத்தின் அடிப்படை நோக்கம் ஆகும். இதன் மூலம் அந்த அமைப்பின் நிதிநிலை மேம்படுவதோடு, பராமரிப்பு செலவுகளும் குறைகின்றன. மேலும் வெளிப்படையான ஏல நடைமுறைகள் மூலம் சந்தை விலைக்கு இணையாகவோ அல்லது அதற்கு மேலாகவோ வருவாயை பெற ஏலம் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
நிலங்கள் விற்பனை ஏலம்
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை பொறுத்தவரை, அவை உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் மற்றும் மனைகளை வழங்குவதற்காக உருவாக்கப்படுகின்றன. பல நேரங்களில் இந்த சங்கங்கள் வாங்கிய நிலங்களில் குறிப்பிட்ட பகுதிகள் விற்கப்படாமல் அல்லது ஒதுக்கீடு செய்யப்படாமல் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கும். இத்தகைய உபரிநிலங்கள் சங்கத்தின் சொத்துக்களாகவே கருதப்படும்.
இந்த சொத்துக்களை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையை சங்கம் தனது கடன்களை அடைப்பதற்கும் அல்லது புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். வீட்டு வசதி சங்கங்கள் சட்ட ரீதியான விதிகளுக்கு உட்பட்டு, உரிய மதிப்பீடு செய்த பின்பே இத்தகைய பொது ஏலங்களை நடத்துகின்றன.
17 இடங்களில் சொத்துக்கள் ஏலம்
இந்நிலையில், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், 17 இடங்களில் சொத்துக்களை ஏலம் விடும் பணிகளை துவக்கியிருப்பததக தகவல் வெளியாகி உள்ளது..
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 680 வீட்டுவசதி சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சங்கங்களில் விற்காமல் கைவசம் உள்ள நிலம் உள்ளிட்ட அசையா சொத்துக்களை, பொது ஏலம் வாயிலாக விற்க, தமிழக அரசு கடந்த வருடம் ஒப்புதல் அளித்தது. அதன்படி அத்தகைய சொத்துக்களுக்கு மதிப்பு நிர்ணயிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இந்த பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், சொத்து விற்பனை பணிகளை, சங்க நிர்வாகிகள் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது ஒரே சமயத்தில் 6 மாவட்டங்களில், 17 இடங்களில் சொத்துக்களை ஏலம் விட, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கூட்டுறவு வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் சொல்லும்போது, வேலுாரில், 6, சேலம், 4, தஞ்சாவூர், கோவை, விருதுநகர் மாவட்டங்களில் தலா, 2, திருச்சியில் ஒன்று என மொத்தம், 17 இடங்களில் சொத்துக்கள் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏலம் விட என்ன அவசரம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், இது தொடர்பான பணி முடங்க வாய்ப்புள்ளது. அந்தந்த பகுதியில் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில், சங்க சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து, துறையின் மேலதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது" என்று தெரிவித்தார்..
அரசு அனுமதி அளித்து ஓராண்டு காலம் அமைதியாக இருந்துவிட்டு, சரியாகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இவ்வளவு வேகமாக 17 இடங்களில் ஏல அறிவிப்புகளை வெளியிடுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
நிர்வாக ரீதியாக இது அவசியமான ஒன்றாக இருந்தாலும், கால நேரம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் கட்சி பிரமுகர்களுக்குச் சாதகமாக சொத்துக்கள் கைமாற வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள புகார்களை துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் வருவதற்கு முன்பே இந்தப் பணிகளை முடிக்கத் துடிப்பது முறையான ஏல நடைமுறைகளுக்குச் சவாலாக அமையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications