அடடே.. அமெரிக்க அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையர்களும் சென்னையில் வாழ்ந்தவர்கள்தானா?
சென்னை: அமெரிக்காவின் 46வது அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையர்களும் சென்னையில் வாழ்ந்திருக்கக் கூடும் என்கிற தகவல்கள் ஆச்சரியம் தருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜோ பிடன். அமெரிக்காவின் முதலாவது பெண் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம், தமிழ்நாட்டின் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம். கமலா ஹாரிஸின் தேர்தல் வெற்றியை துளசேந்திரபுரம் கிராமம் கொண்டாடி மகிழ்ந்தது.
இந்தியாவில் மூதாதையர்கள்?
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையர்களும் சென்னையில் வாழ்ந்தவர்களா? என்கிற தகவல் ஆச்சரியம் தருகிறது. 19-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனியில் கிறிஸ்டோபர் பைடன், வில்லியம் பைடன் எனும் இருசகோதரர்கள் பணியாற்றினர்.
கிறிஸ்டோபர் பிடன் சென்னை
லண்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்தில் மாலுமிகளாக இருவரும் பணியாற்றி இருக்கின்றனர். இவர்களில் கிறிஸ்டோபர் பிடன், சென்னையிலேயே தங்கி இருந்திருக்கிறார். சென்னையில் புகழ்பெற்ற பிரமுகராகவும் திகழ்ந்திருக்கிறார்.
நினைவுகூர்ந்த ஜோ பிடன்
2013-ம் ஆண்டு அமெரிக்க துணை அதிபராக இருந்த போது இந்தியாவுக்கு முதல் முறையாக ஜோ பிடன் வருகை தந்தார். மும்பைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜோ பிடன், தமது தூரத்து உறவினர்கள் மும்பையில் வசித்ததையும் தாம் எம்.பியாக பதவி ஏற்ற போது பிடன் என்ற பெயரில் மும்பையில் இருந்து வாழ்த்து கடிதம் வந்ததையும் சுட்டிக்காட்டியும் இருந்தார்.
இந்திய பெண்ணுடன் திருமணம்
2015-ம் ஆண்டு வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோ பிடன், மூதாதையர்களில் ஒருவரான ஜார்ஜ் பிடன், இந்தியாவில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியதையும் சுட்டிக்காட்டினார். அவர் பணி ஓய்வு பெற்ற பெண் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டி செட்டிலாகிவிட்டதாகவும் கூறியிருந்தது.
கிறிஸ்டோபர் பைடன் கல்லறை
சென்னை கதீட்ரலில் கிறிஸ்டோபர் பைடன் பெயரிலான கல்லறை ஒன்றும் இருக்கிறது. இந்த கிறிஸ்டோபர் பைடன், அமெரிக்காவின் அதிபராகும் ஜோ பிடனின் மூதாதையராக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.