மின்சார கெட்டில் வைத்து ரயிலில் டீ போட்டால் நேரா ஜெயில்! சார்ஜிங் பாயிண்ட்டில் "நோ எலக்ட்ரிக்கல்ஸ்"
சென்னை: ரயில்களில் மின்சார கெட்டில் பயன்படுத்தி தண்ணீர் கொதிக்க வைப்பதற்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடையை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.. இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன தெரியுமா?
எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், கேஸ் சிலிண்டர்கள், அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்று ரயில்வேயின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

எலக்ட்ரிக்கல்ஸ்
எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களுடன் பயணிப்பது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டம் 1989ன் பிரிவு 67, 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருள்களுடன் பயணிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், "130" என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது பணியில் இருக்கும் எந்த ரயில்வே ஊழியர்களையும் அணுகலாம்" என்று ரயில்வே நிர்வாகம் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது.
இப்படி பலவிதங்களில் எச்சரிக்கை செய்தும்கூட, சில பயணிகள் ரயில்வே விதிமுறைகளை சரியாக மதிப்பதில்லை..
மேகி நூடுல்ஸ்
அதுமட்டுமல்ல, ரயில் பயணத்தின்போது பயணிகள் தங்களது செல்போன், லேப்டாப்களுக்கு சார்ஜ் செய்வதற்காக விரைவு ரயில்களில் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிலர் இந்த வசதியையும் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.
அதாவது டீ அல்லது காபி போடுவதற்காக மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் கெட்டில் போன்ற சாதனங்களை பயன்படுத்தி வரும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன..
இப்படித்தான் கடந்த மாதமும், மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. அம்மாநில பெண் ஒருவர், ஓடும் ரயிலில் மேகி நூடுல்ஸ் செய்து சாப்பிட்டுள்ளார்.. அவசரத்துக்கு குடிநீரை காய்ச்சி கொள்வதற்காக பயன்படும் மின்சார கெட்டிலை வைத்து, மேகி நூடுல்ஸை இந்த பெண் சமைத்திருக்கிறார்..
மின்சார கெட்டில்
அதுமட்டுமல்ல, கெட்டிலில் 15 பயணிகளுக்கு டீ போட்டு தந்திருக்கிறார்.. இதை அந்த பெண்ணே ஒரு வீடியோவில் பேசி, அந்த வீடியோ இணையத்தில் பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்து பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்..
கொஞ்சமும் ஆபத்தை உணராமல், இந்த பெண் மேகி நூடுல்ஸ் சமைத்ததாக கேஷூவலாக சொல்கிறாரே? சம்பந்தப்பட்ட பெண் மீது ரயில்வே அதிகாரிகள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து, ரயில்வேயும், சம்பந்தப்பட்ட பெண் பயணி மீது நடவடிக்கை எடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
சார்ஜிங் பாயிண்ட்
இந்நிலையில், ரயில்களில் மின்சார கெட்டில் பயன்படுத்தி தண்ணீர் கொதிக்க வைப்பதற்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறும்போது, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடியப் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. குறிப்பாக, பட்டாசுகள், சமையல் எரிவாயு சிலிண்டர், அமிலம், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை ரயில்களில் கொண்டு செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடை செய்யப்பட்டப் பொருட்களை எடுத்துச் செல்வோர், தங்களுடன் பயணிக்கும் மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களாகக் கருதப்படுவார்கள்.
அதேபோல், ரயில்களில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களில் கெட்டில் போன்ற மின்சார சாதனங்களை பயன்படுத்துவதும் தவறு. இது போன்ற செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், சட்டம் மிகவும் கடுமையாக இருக்கும்.
ரூ.1000 அபராதம்
விதியை மீறிச்செயல்படும் பயணிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படலாம். அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம். அபராதம், சிறைத்தண்டனையும் சேர்த்து இரண்டும் கூட விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பயணிகள் தங்கள் பாதுகாப்பிற்கும், சகப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து, ரயில்வேயின் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications