சூப்பரோ சூப்பர்.. முதல்வர் ஸ்டாலினின் திட்டத்தை மனம் திறந்து பாராட்டிய அகிலேஷ் யாதவ்!
தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அகிலேஷ் யாதவ் பாராட்டியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் ஆகிய திட்டங்களைப் பாராட்டிப் பேசியுள்ளார் சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்று, அவரை வாழ்த்திப் பேசியுள்ளார்.

பொதுக்கூட்டம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்வரை பாராட்டிய அகிலேஷ்
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அகிலேஷ் யாதவ் பேசுகையில், "தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் அணியை தொடங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1976ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் ஸ்டாலின். ஸ்டாலின் ஒரு நாத்திகவாதியாக இருந்தாலும் எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல. சமத்துவம், சமூக நீதி குறித்த அவரது பார்வையை நான் பாராட்டுகிறேன்.

விவசாயிகளுக்கு துணை நின்றார்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி விவசாயிகளுக்கு துணை நின்றவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதல் வேளாண் பட்ஜெட் அவரது ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. கொரோனா காலத்திலும் மக்களை நன்றாக பாதுகாத்து நோய் தொற்றை சரியாக கையாண்டார். விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் உள்ளவர் ஸ்டாலின்.

சூப்பர் திட்டங்கள்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டு உடனக்குடன் தீர்வு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே பயனடைந்து வருகின்றனர். பதவியேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக சமூக நீதியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்." என வெகுவாகப் பாராட்டியுள்ளார்












Click it and Unblock the Notifications