உத்தர பிரதேசம் 11.. பீகாருக்கு 10.. தொகுதி மறுவரையறையில் அதிக சீட் பெறும் மாநிலங்கள் இதுதான்-லிஸ்ட்
சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் 2026ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில் உத்தர பிரதேசம், பீகார் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரும் 2026ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது குறையலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தென்மாநிலங்கள் மக்கள்தொகை பெருக்கத்தை திட்டமிட்டு கட்டுப்படுத்தியது தான். ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய வடமாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு தென்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் சர்வதேச அமைதிக்கான கார்னேஜ் (Carnegie) அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு குறித்த விபரத்தை இந்தியா டூடே வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த வடமாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும் என்பது குறித்த முக்கிய விஷயம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், குஜராத் ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, சத்தீஸ்கார் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சாக உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், பீகாரில் 10 தொகுதிகளும் அதிகரிக்கலாம் என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி உத்தர பிரதேசத்துக்கு 11 நாடாளுமன்ற தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தற்போது 80 தொகுதிகள் உள்ள நிலையில் கூடுதலாக 11 தொகுதிகளை சேர்த்து 91 என உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்தில் தற்போது 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் கூடுதலாக 10 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் ராஜஸ்தானில் 21 தொகுதிகள் உள்ள நிலையில் 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகள் உள்ள நிலையில் 4 தொகுதிகளும் அதிகரிக்கலாம். இதுதவிர குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications