அதிர்ந்து போன ஆவடி.. ஏடிஎம்மிற்குள் வட மாநில சிறுவன் செய்த காரியம்..! கையும் களவுமாக பிடித்த மக்கள்
சென்னை: சென்னை ஆவடியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஏடிஎம்மில் பணத்தை அபேஸ் செய்ய அந்த சிறுவன் கையாண்ட யுக்தியும், அந்த சிறுவன் போலீசில் சிக்கிய வீடியோவும் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
சமீப காலமாகவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து சென்று பணத்தை ஆட்டையை போடுவது, வெல்டிங் மிஷினை வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை அபேஸ் செய்வது என ஏடிஎம் மோசடி சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன.

குறிப்பாக சினிமா காட்சிகளின் ஏடிஎம் கொள்ளைகளை பற்றி பல்வேறு விதமாக காட்டியிருப்பார்கள். அண்மையில் வெளியான அருண் விஜய்யின் தடம் படத்தில் கூட யோகிபாபுவும், அருண் விஜய்யும் சேர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே தூக்கி சென்று சேட்டிடம் டீல் பேசி பணத்தை அபேஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். சினிமாவில்தான் இப்படி என்றால் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சிலர் கைவரிசை காட்டுகிறார்கள்.
அந்த வகையில் தான், 15 வயது சிறுவன் ஒருவன் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து மாட்டிக்கொண்டுள்ளான். இது குறித்த விவரம் வருமாறு:- சென்னை ஆவடி அருகே ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் கிளை உள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாலையில் அமைந்துள்ள இந்த ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர்களுக்கு பணம் வரவில்லை. ஏடிஎமில் வங்கி கார்டை சொருகி பின் நம்பரை போட்டு பணம் எடுத்தால், பணம் எடுத்ததாக மெசேஜ் மட்டும் செல்போனுக்கு வருகிறது. ஆனால் பணம் கைக்கு வரவில்லை என்று பலர் புகார் அளித்து வந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வருவதற்கான துளை அருகே இன்னொரு பெட்டி போன்ற ஒன்றை பொருத்தி அதில் பணம் வருவதற்கான துளை இருக்கும் போன்ற அமைப்பை வைத்து, அதற்கு என ஒரு சாவியை வைத்திருக்கின்றார். வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கும் போது அந்த பணம் வெளியில் தெரியாது.
அந்த சிறுவன் வைத்த பெட்டிக்குள் தான் இருக்கும். எனவே வாடிக்கயாளர்கள் பணம் வரவில்லை என்று வெளியே சென்றதும், சிறுவன் அந்த பெட்டியை திறந்து பணத்தை அபேஸ் செய்துள்ளார். இப்படியே பணத்தை அபேஸ் செய்து வந்த சிறுவன், கடைசியில் ஒரு வாடிக்கையாளரிடம் சிக்கிக்கொண்டார். அந்த நபர் சிறுவனை பிடித்து நையப்புடைக்கவே உண்மையை கக்கியுள்ளான் அந்த சிறுவன்.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அந்த சிறுவனை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசாரிடம் அந்த சிறுவன் எப்படி பணத்தை திருடினான் என்பதை செய்து காண்பித்தான். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தற்போது அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications