விஜயின் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துகள்.. ஆனால்! அனுதாபங்களையும் வைகைசெல்வன் தெரிவித்தது ஏன்?
சென்னை: நடிகர் விஜய்யின் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துகள் என அஇஅதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம் நடிகர் விஜய் மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு பாராட்டுச் சான்றிதழை கொடுத்து ஊக்கத்தொகையையும் கொடுத்திருந்தார்.

திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த விழாவில் நிறைய விஷயங்களை அவர் பேசியிருந்தார். அதில் முக்கியமானது, யார் பேச்சையும் கேட்காதீர்கள், உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடந்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எல்லாம் நாளைய வாக்காளர்கள். இனி நல்ல நல்ல புதிய தலைவர்களை எல்லாம் பார்ப்பீர்கள். நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள். இப்போது வரை உங்கள் கையால் உங்கள் கண்களை குத்திக் கொள்ளும் நிலைதான் இருக்கிறது. உங்கள் பெற்றோரிடம் இனியும் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதீர்கள் என தைரியமாக சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என்றார்
விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரசியலுக்கு வருவார் என சொல்லப்படும் நிலையில் அதற்கான சமிக்ஞை இந்த பேச்சில் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழா குறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவி செய்கிறார்.. அவர் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள்!.
எதிர்கால வாக்காளர்களுக்கு என்று நினைத்து உதவி செய்திருந்தால் அவருக்கு அனுதாபங்கள் என வைகைச் செல்வன் தெரிவித்திருந்தார். அது போல் உதயநிதியிடம் விஜய்யின் அறிவுரை குறித்து கேட்ட போது அவர் கூறுகையில் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், யார் வர வேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் கேட்டுக் கொண்டபடி விஜய் பல போஸ்களை கொடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications