தமிழக மீனவர் படுகொலை- சிங்கள கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வைகோ, அன்புமணி வலியுறுத்தல்!
சென்னை: இலங்கை கடற்படையால் நடுக்கடலில் தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வலியுறுத்தி உள்ளார். மேலும் சிங்களப் படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பியும் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை: இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப் படகுகள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. அதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லை பகுதியில் வங்கக்கடலில் நெடுந்தீவு அருகில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென்று அங்கு இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது .
கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலைக் கொண்டு வேகமாக மோதினர். இதில் நிலைகுலைந்த மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது. உடனடியாக வேறு வழியின்றி படகில் இருந்த மீனவர்கள் மூக்கையா, மலைச்சாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு பேரும் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தனர். பின்னர் இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. கடலில் மூழ்கிய மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன. இலங்கை கடற்படை நடத்தி இருக்கும் இப்படுகொலை கடும் கண்டனத்துக்கு உரியது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 10 மீனவர்கள் கடந்த ஜூன் 23ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் தங்கள் படகை மோதினர். ஆனால், அதில் சிங்களக் கடற்படை படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார். சிங்கள கடற்படை வீரர் விபத்தில் உயிரிழந்தை இலங்கை அமைச்சரும், தமிழ் இனத்திற்கு துரோகம் இழைப்பதையே நோக்கமாக கொண்டிருப்பவருமான டக்ளஸ் தேவானந்தா தமிழக மீனவர்கள் மீது பழி சுமத்தினார்.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு இந்திய அரசு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும்.தமிழக மீனவர்களின் படகுகளை மோதி மீனவரை படுகொலை செய்த சிங்கள கடற்கரையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதி தாக்கியதில், படகு கவிழ்ந்து அதில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்திருக்கிறார். படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த மூக்கையா, முத்து முனியாண்டி, இராமச்சந்திரன் ஆகிய மூன்று மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் மலைச்சாமி குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைக் கப்பல் மோதிய நிகழ்வை விபத்தாக பார்க்க முடியாது. அதை திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும் தான் பார்க்க வேண்டும். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 10 மீனவர்கள் கடந்த ஜூன் 23&ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் படகு மீது இலங்கைக் கடற்படையினர் தங்கள் படகை மோதினர். ஆனால், அதில் சிங்களக் கடற்படை படகு கவிழ்ந்ததில் சிங்கள வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் தான் தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் அவர்களின் கப்பலை மோதித் தாக்கியுள்ளனர். இதை மத்திய, மாநில அரசுகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மின் பிடித்து வந்த பகுதிகளில் தொடர்ந்து மீன் பிடிப்பதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால், தமிழக மீனவர்கள் எல்லை மீறி வந்ததாக கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையை செய்து வந்த சிங்களக் கடற்படை, இப்போது மிருகத்தனமாக தமிழக மீனவர்களின் படகு மீது மோதி மீனவர்களை படுகொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறது. இதற்கு காரணமான சிங்களப் படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இரு தரப்பு அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்புகளை அழைத்துப் பேசி இந்திய - இலங்கை கடற்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications