கலிங்கப்பட்டியில் இந்தாண்டு பொங்கல் விழா கிடையாது! 50 ஆண்டு கால வழக்கத்தை நிறுத்தும் வைகோ!
தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் கடந்த 50 ஆண்டுகாலமாக தாம் நடத்தி வரும் பொங்கல் விழாவை இந்தாண்டு நடைபெறாது என அறிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இதற்கான காரணத்தை வைகோவே விவரித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலாலும், மித மிஞ்சிய பெருமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன.
விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து நின்ற காட்சிகளும், மக்கள் பட்ட துயரமும் மனதை வாட்டுகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் அமைச்சர்கள், அரசுத் துறையினர் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்களால் இயன்ற நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றனர். பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்ற போதிலும் நிலைமை முழுமையாக சீரடைய இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும்.
இயற்கைச் சீற்றத்தால் பல இலட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற நிலையில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை தாராள மனதுடன் வழங்கிட இந்திய ஒன்றிய அரசு இதுவரை முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இத்தகைய சூழ்நிலையில்,கடந்த ஐம்பது ஆண்டுகளாக கலிங்கப்பட்டியில் நான் நடத்தி வரும் தமிழர் திருநாள் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்வாண்டு நடைபெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications