2022 ஹஜ் பயணம்... சென்னை விமான நிலையத்தை புறக்கணித்தது ஏன்..? மத்திய அரசுக்கு வைகோ கேள்வி..!
சென்னை: 2022-ம் ஆண்டுக்கான ஹஜ் பயண விமானங்களை சென்னையிலிருந்து இயக்காமல் புறக்கணித்தது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நாடு முழுவதும் 21 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஹஜ் பயண விமானம் 10 இடங்கள் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்திருந்தார்.
அந்த 10 இடங்களில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இடம்பெறாததால் வைகோ இன்று வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஹஜ் பயணம்
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022-ம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை மத்திய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. வழக்கமாக இந்தியாவின் 20 வானூர்தி நிலையங்களில் இருந்து ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்வர். ஆனால் அந்த எண்ணிக்கையை பத்தாக குறைத்துவிட்டார்கள்.

சென்னை ஏர்போர்ட்
அதில் சென்னை வானூர்தி நிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் அந்தமான் முஸ்லீம்களும் சென்னை வானூர்தி நிலையம் வழியாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இனி அவர்கள் அனைவருமே கேரளத்தின் கொச்சின், கர்நாடகத்தின் பெங்களூரு, அல்லது ஹைதராபாத் சென்று தான் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

கூடுதல் செலவு
இது தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்கு பெருத்த அலைச்சலையும் கூடுதல் பொருட்செலவையும் ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு சென்னை வானூர்தி நிலையத்தை மத்திய அரசின் பட்டியலில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

10 இடங்கள்
இதனிடையே ஸ்ரீநகர், டெல்லி, மும்பை, லக்னோ, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு, கொச்சின், கவுகாத்தி, ஆகிய 10 ஊர்களில் இருந்து ஹஜ் பயணத்திற்கான விமானங்கள் இயக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான சென்னையை பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications