திருச்சியில் போட்டியிட வைகோ திட்டமா.. பரபரக்கும் திமுக - மதிமுக முகாம்கள்
Recommended Video
சென்னை: பேசாம திருச்சியை வைகோவுக்கு தந்துடலாமா என்று ஸ்டாலின் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில் திமுகவில் அங்கம் வகித்தபோது, கடைசிவரை திமுக கூட்டணியில்தான் இருக்க விரும்பினார் வைகோ. ஆனால், அவரது சூழ்நிலை அதை அனுமதிக்கவில்லை.
திமுகவில் கருணாநிதியின் ஆதரவோடு ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கிய பிறகு வைகோ மனம் நொந்தது நியாயமே. இந்த விஷயத்தில் கருணாநிதி தரப்பில் தவறு நடந்ததும் உண்மையே.
எல்.கணேசன்
வைகோவின் ஆதங்கத்தை அதிகப்படுத்தி திமுகவிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்து மதிமுகவை துவக்க ஏற்பாடு செய்தார் எல்.கணேசன். வைகோ மீதான பற்றாலோ, பாசத்தோலோ இதை எல்.கணேசன் செய்யவில்லை. திமுகவை உடைக்க வேண்டும் என்ற அப்போதைய அதிமுகவின் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே இதை மேற்கொண்டார் என்பதெல்லாம் பழைய கதை.
நெருங்க விடவில்லை
அதன் பிறகு இடையில் ஒருமுறை கருணாநிதியின் பாச அழைப்பினால் திமுக பக்கம் திரும்பினாலும் போன வேகத்திலேயே வந்து விட்டார் வைகோ. அதன் பிறகு ஜெயலலிதா மறைந்தபிறகுதான் வைகோ திமுக பக்கம் சாய ஆரம்பித்தார். எனினும் ஸ்டாலின் ஓரளவுக்கு மேல் வைகோவை தன்னிடம் நெருங்க விடவில்லை. சில சூழ்நிலைகளில் வைகோ கூட்டணிக்குள் இருக்கிறாரா இல்லையா என்றே சந்தேகம் வந்துவிட்டது.
தமிழிசை கிண்டல்
கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என குரல் உசத்தி சொன்ன ஸ்டாலின், மதிமுக கூட்டணிக்குள் இருப்பதாக உறுதியாக சொல்லவில்லை. தமிழிசை கூட, "வைகோவை முதலில் அண்ணா அறிவாலயத்தில் உள்ளே விடுகிறார்களா என்று பாருங்கள்" என்றார். ஆனால் இந்த சந்தேகம் எல்லாம் இப்போது உடைத்தெறியப்பட்டுவிட்டது.
திருச்சியில் முகாம்
ஏனெனில் வைகோ வரப்போகிற எம்பி தேர்தலில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. அதற்கு தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்று சொல்லப்படும் திருச்சியை தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதற்காகத்தான் வைகோ கொஞ்ச நாளாகவே திருச்சியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஜனவரி 12-ம் தேதி ஶ்ரீரங்கத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றிய சொற்பொழிவு ஆற்றினார். நேற்று விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார். நாளை அதாவது ஜனவரி 25-ம் தி மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் அமைதி ஊர்வலத்தை நடத்த போகிறார். பிப்ரவரி 12, மார்ச் 8 ஆகிய தேதிகளிலும் இதே திருச்சியில்தான் எல்லா நிகழ்ச்சிகளையும் நிகழ்த்த உள்ளார்.
நேருவின் அக்கறை
இந்த விவகாரத்துக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் நேரு இருப்பதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதற்கேற்றார்போல நேற்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பாக ஸ்டாலின், வைகோ தனிப்பட்ட முறையில், நேரு முன்னிலையில் பேசியுள்ளனர். இந்த தனிப்பட்ட சந்திப்புக்கு நேரு அதிக அக்கறை காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
சமுதாய முத்திரை
ஏற்கனவே கடந்த தேர்தலில் தன் சொந்த தொகுதியில் நின்று தோற்றாலும், திருச்சி தொகுதி பொதுவான தொகுதி என்பதால் இதனை வைகோ தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தென்மாவட்டத்திலேயே போட்டியிட்டு வருவதால் தன் மீது சமுதாய முத்திரை குத்தப்படுவதாக வைகோ உணர்வதாகவும், அதனை உடைக்கவே திருச்சியை வைகோ தேர்ந்தெடுக்க இன்னொரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவான தொகுதியில் நின்று வெற்றி பெற்றால் மக்கள் முன்னிலையில் சமுதாய முத்திரை இன்றி, பொதுவான தலைவனாக தன்னை ஏற்பார்கள் என வைகோ நம்புகிறாராம்.
தயாநிதி மாறன்
அதுவும் இல்லாமல் திமுகவின் இரும்பு கோட்டையாக எப்பவுமே திருச்சி இருப்பதால் வைகோவுக்கு இது சாதகமாகவே அமையும் என தெரிகிறது. அப்படி ஒருவேளை திருச்சியை வைகோவுக்கு ஒதுக்கினால், மற்ற திமுக தலைகள் சும்மா இருப்பார்களா என்று தெரியாது. சொந்த கட்சியில் இருக்கும் மூத்த தலைகளை விட்டுவிட்டு, கூட்டணி கட்சி தலைவருக்கு முக்கியமான தொகுதியை ஒதுக்குவதால் கண்டிப்பாக புகைச்சல் வரத்தான் செய்யும். அதிலும் முக்கியமாக இந்த தொகுதியை தயாநிதி மாறன் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
திருச்சி டார்கெட்
ஏற்கனவே டில்லி விவகாரங்களில் திமுக தயாநிதி மாறனை ஒதுக்கி வைத்து, அந்த இடத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளார். இப்போது வைகோவுக்கு தூக்கி திருச்சி தந்துவிட்டால், தயாநிதி என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை. எப்படியோ, திருச்சியை டார்கெட் செய்து, அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி உள்ளார் வைகோ.