முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்- மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்திய வைகோ
சென்னை: இலங்கை இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் 2 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இனப்படுகொலை நாளான மே 18-ஐ முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தமது இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.
இது தொடர்பாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு: மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமது அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.

தனித்தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி பூண்டார். இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: என் இதயத்தில் மிகப்பெரிய வலியுடன் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் உங்களுடன் பேசுகிறேன். ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக, இந்த பிரச்சனை குறித்து நான் பல முறை குரல்கொடுத்துள்ளேன், அதன்மூலம் இலங்கைத் தமிழர்கள் சந்தித்த கொடுமைகள் குறித்த உண்மையின் பக்கம் இந்திய மக்களின் கவனத்தையும், இந்திய நாடாளுமன்றத்தின் கவனத்தையும் திருப்பியுள்ளேன்.
இலங்கையின் அண்டை நாடாக, போர்க் காலத்தில் அங்குள்ள மக்களுக்கு என்ன கொடுமைகள் நடக்கின்றன, நடந்தன என்பதை இந்தியா அறியச்செய்தோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகமோசமான ஒரு சம்பவமாக இது இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இன்றும் கூட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் தங்களது கணவருக்கோ, தந்தைக்கோ அல்லது தனது சகோதரருக்கோ என்ன நேர்ந்தது என்பதைக் கூட தெரிந்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமிழ மக்களின் நலன்களை இலங்கை ராணுவம் அபகரித்துக்கொண்டது. இன்றளவும் கூட தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துக்கொண்டு தான் இருக்கிறது.
சமீபத்தில் கூட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த நினைவிடம், முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதப்படுத்தப்பட்டன. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சமத்துவமோ, அடிப்படை உரிமைகளோ அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இலங்கைத் தமிழர்கள் குறித்த பிரச்சனையை அனைவரிடமும் கொண்டுசேர்த்த கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சியும் மிக முக்கியமானது. அது இனியும் தொடரும். உண்மை நிச்சயம் வெல்லும். இவ்வாறு டி. ராஜா தெரிவித்தார். டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்விலும் டி. ராஜா பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications