“மின்னல் வேக அரசு.. அந்தக் குரல் இன்னும் கேக்குது" - ஓராண்டு ஸ்டாலின் ஆட்சியை பாராட்டிய வைகோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

தி.மு.க அரசின் இந்த ஓராண்டு ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு என ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தி.மு.க அரசைப் பாராட்டியுள்ளார்.

வைகோ பாராட்டு

வைகோ பாராட்டு

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் திருநாட்டில், எங்கள் நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடும் என்றே நீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் எண்ணம், தமிழகத்தில் 07.05.2021 அன்று மீண்டும் ஈடேறியது.

அந்த நாளில், நீதிக்கட்சியின் நீட்சியாய், தி.மு.கழக அரசின் தொடர்ச்சியாய், முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்று அவர் தொடங்கிய உறுதிமொழியின் வீர முழக்கம், தமிழர் செவிகளில் இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

10 ஆண்டு பணிகள் ஒரே ஆண்டில்

10 ஆண்டு பணிகள் ஒரே ஆண்டில்

மேலும், பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஓராண்டு முடிவதற்கு உள்ளாகவே முனைந்து நின்று நிறைவேற்றிய, ஓய்வு அறியா உழைப்பாளியாம், நம் முதல்வரின் செயல் திறனை நாடும் ஏடும், நல்லவர்களும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் பாராட்டிப் புகழ்மாலை சூடி இருப்பது, திராவிட இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கின்றது என வைகோ தெரிவித்துள்ளார்.

கோட்டையில் அடி எடுத்து வைத்போது, கொரோனா எனும் கொடுந்தொற்று புயலாய்த் தாக்கியது. மின்னல் வேக நடவடிக்கைகளை மேற்கொண்டு, 91 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பு ஊசி செலுத்தி, அச்சத்தின் பிடியில் இருந்து மக்களை விடுவித்தது தமிழ்நாடு அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார் வைகோ.

மக்கள் நல அரசு

மக்கள் நல அரசு


கொரானாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவித் தொகை, இடை நின்ற குழந்தைகள் மீண்டும் கல்வி தொடர முயற்சி, பொது முடக்கக் காலத்திலும் கற்றல் இழப்பை ஈடுகட்ட. 'இல்லம் தேடி கல்வி' எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் என மக்கள் நல அரசாக முழு வீச்சாகக் களத்தில் இறங்கி செயல்பட்டது தமிழ்நாடு அரசு.

'மக்களைத் தேடி மருத்துவம்' என அறிவித்து, மருத்துவச் சேவையை மக்கள் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் திட்டம்; சாலை விபத்துகளில் சிக்கியோரைக் காக்க, 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' என்ற மனிதநேய திட்டம்; மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டுத் தீர்த்து வைக்கும் 'நான் முதல்வன்', 'முதல்வரின் முகவரி' எனும் திட்டங்களைச் செயல்படுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றது, நம்முடைய ஸ்டாலினின் 'திராவிட மாடல்' அரசு எனவும் பாராட்டியுள்ளார் வைகோ.

ஆன்மீக அரசு

ஆன்மீக அரசு

பெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்', டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள், 'சமத்துவ நாள்' என அறிவித்து, சமத்துவ - சமூகநீதி உறுதிமொழிகளை ஏற்கச் செய்தது, வேறுபாடுகள் இன்றி அர்ச்சகர் பணியில் அனைவரும் நியமனம், ஆலயங்களில் தமிழில் வழிபாடு, தனியாரின் ஆக்கிரமிப்புகளில் இருந்த இந்து அறநிலையத்துறையின் சொத்துகளை மீட்டது ஆகிய நற்பணிகளைப் பாராட்டி, இந்த அரசு ஆன்மீக அரசு என சைவ மடங்களின் துறவிகளே பாராட்டும் நல்ல சூழ்நிலையை உருவாக்கியது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் அரசு பணி இடங்களில் தமிழர்களுக்குத்தான் வாய்ப்பு, அவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறல் வேண்டும்; அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும், கோப்புகள், அரசு செயல்பாடுகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இடம்பெற வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகளால் தமிழுக்கும், தமிழர்க்கும் உரிய இடம் தந்து சிறப்பு செய்து வருகிறது கலைஞர் கருணாநிதி வழி நிற்கும் தமிழ்நாடு அரசு எனவும் புகழ்ந்துள்ளார் வைகோ.

ஈழத் தமிழர்களுக்காக

ஈழத் தமிழர்களுக்காக

'ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்ல' என்று அறிவித்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்ற புதிய பெயரினைச் சூட்டி, 317 கோடி ரூபாய் மதிப்பிலான சமூக நலத் திட்டங்களை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்கள் நலனை மேம்படுத்த 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவினையும் அமைத்தது ஸ்டாலின் அரசு.

தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை மக்களுக்காக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர் காக்கும் மருந்துகள் இவைகளோடு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்து இருக்கின்றது தமிழ்நாடு அரசு என்றும் தெரிவித்துள்ளார் வைகோ.

மின்னல் அரசு

மின்னல் அரசு


அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட இயக்க இலட்சியங்களை நிறைவேற்றும் அரசாக, தமிழ்நாடு அரசு கடந்த ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. இந்தச் சாதனைச் சரிதம் தொடரவும், அனைத்துத் துறைகளிலும் திராவிட இயக்கக் கொள்கைகள் நிறைவேற்றிடவும் மின்னல் வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்ற ஸ்டாலின் அரசுக்கு, ம.தி.மு.க சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்." என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+