மதிமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம்! எவர் நினைத்தாலும் கழகம் சிதையாது! முயற்சி முனை மழுங்கும்! -வைகோ
சென்னை: மதிமுகவை எவர் நினைத்தாலும் உருக்குலைக்க முடியாது என்றும் முயற்சிகள் அனைத்தும் முனை மழுங்கும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதைக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக வைகோ தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது;
''மே 6 2023ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிற பொழுது பெருமித உணர்வும் அதே சமயத்தில் திகைப்பும் ஏற்படுகிறது.
திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் காலத்தின் தேவையாக கரு கொண்டது. ஒரு மாபெரும் இலட்சிய இயக்கமாக உரு கொண்டது.
இந்த மூன்று பத்து ஆண்டுகளில் எத்தனையோ காட்டாறுகளை நாம் கடந்து வந்திருக் கிறோம். அதுவும் நெருப்பு ஆற்றில் நீந்தி வந்திருக்கிறோம்.
ஜூன் 14 ஆம் தேதி கழகத்தின் 29 வது பொதுக்குழு கூடி தலைமைக் கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பொதுக் குழுவில் கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டவட்ட மான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கழகம் அமைக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும்.
குளித்தலையில் நடந்த கழகத்தின் மாணவரணி செயலாளர் தம்பி பால.சசிகுமார் திருமண விழாவில் நான் குறிப்பிட்டதை போல கழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. கடந்த காலங்களில் கழகத்தை சிதைக்க எண்ணியவர்கள் நினைப்பில் மண் விழுந்தது என்றும் அந்த திருமண விழாவில் பேசினேன். அதை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
பாச இழைகளால் பின்னப்பட்டுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் எனும் இந்த மகத்தான இயக்கத்தை எந்த உற்பாதத்தாலும் உருக்குலைக்க முடியாது. அந்த முயற்சிகள் அனைத்தும் கடந்த காலங்களில் முனை மழுங்கியது போலவே எவர் நினைத்தாலும் இப்போதும் அதுவே நடக்கும்.
முப்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் முதன்மையான இடத்தை பெற்றே தீரும்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications