இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமேயில்லை! உள்நோக்கத்துடன் 3 மெடிக்கல் காலேஜ்களின் அங்கீகாரம் ரத்து -வைகோ
சென்னை: தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது மத்திய அரசின் உள்நோக்கமிக்க நடவடிக்கை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கையை ஒரு போதும் நியாயப்படுத்தவே முடியாது என வைகோ வாதிடுகிறார். முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தமிழகத்தில் 3 முக்கிய மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இதனிடையே இது தொடர்பாக வைகோ தனது ஆதங்கத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளதன் விவரம் வருமாறு;
தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடை படும் நிலைமை உருவாகி இருக்கிறது.
சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ- மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.
மேற்கண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மிகச் சதாரணமான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். இதனை நியாயப்படுத்தவே முடியாது.
எனவே ஒன்றிய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி,தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை இரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications