நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்.. வைகோ விமர்சனம்
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது என ராஜ்யசபா எம்பி வைகோ விமர்சனம் செய்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவு தேர்வான நீட்டை தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் திமுக கோரியது. மேலும் நீட் தேர்வால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் அந்த தேர்விலிருந்து தமிழகம், புதுவைக்கு விலக்கு அளிக்குமாறு எம்.பி.க்கள் வைத்திலிங்கம், ஆ.ராசா, செல்வராஜ், மாணிக்கம்தாகூர், ராஜேஷ் பாய் நரன்பாய் சவுடாஸமா ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எழுப்பி இருந்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷங்க் பதில் அளித்தார்.
நீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு
அவர் கூறுகையில் நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதே வேளையில் கூட்டு நுழைவுத்தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை கணினி சார்ந்த தேர்வாக நடத்தப்படுகிறது. நீட் தேர்வு மத்திய இடைநிலை கல்வி சி.பி.எஸ்.இ. மூலம் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதாக எந்தவித தகவலும் இல்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கூறுகையில் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் நடத்துகிறது.
நீட் தேர்வால் 6 உயிர்கள் பறிபோய் இருக்கிறது. தமிழ்நாடு அரசு பாஜகவின் கொத்தடிமை அரசாக இருக்கிறது என்றார் வைகோ.