அந்த பயம் இருக்கட்டும்; போன உயிர்கள் திரும்ப வருமா? மத்திய அரசை வெளுத்து வாங்கும் வைகோ!
சென்னை: சர்வாதிகாரத்தின் முதுகெலும்பை விவசாயிகள் அடித்து நொறுக்கியுள்ளதாக கூறியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளை தலைவணங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே போராட்டக்களத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார் வைகோ.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உயிர் வருமா?
''மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது இலட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகேசன் சக்தியாகும் என்பதை விவசாயிகள் நிருபித்திருக்கிறார்கள். ஓராண்டு காலமாக இலட்சக்கணக்கான விவசாயிகள் போராடினார்களே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தார்களே, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை இழந்தார்களே, பிரதமர் மோடி அவர்கள் போன உயிர்களை திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பாரா? ''

நஷ்ட ஈடு 1 கோடி
''உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும். பயிர்களைக் கணக்கிட்டு, கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு தரவேண்டும். வரப்போகின்ற தேர்தலில் தோற்றுப் போவோம் என்கிற பயத்தில் பிரதமர் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வாதிகாரத்தின் முதுகெலும்பு விவசாயிகளால் நொறுக்கப்பட்டுள்ளது. போராடிய விவசாயிகளுக்கு இந்த நாடே தலைவணங்குகிறது.''

வாழ்த்தும் கண்டனமும்
''விவசாயிகள் ஒற்றுமை ஓங்கட்டும்! அவர்களின் உரிமைக் குரல் ஓங்கட்டும்! அவர்களுக்குத் தலைவணங்கி நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன். இனிமேல் இம்மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கின்ற வரையில் மத்திய அரசு கொண்டுவராது என்ற நிலையை விவசாயிகள் ஏற்படுத்திவிட்டார்கள்.போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்தையும், மத்திய அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.''
Recommended Video

உற்சாகம்
இதனிடையே வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என்ற செய்தியை அறிந்தவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளவில்லா மகிழ்ச்சி கொண்டதாக தெரிவிக்கிறார்கள் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள். விவசாயிகளின் நம்பிக்கையையும், போராட்டத்தையும் எண்ணி வைகோ உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு இது போன்று அவர் மகிழ்ச்சி கொண்டது குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications