எங்க ஊருக்கும் வெட்டுக் கிளிகள் வந்துருச்சு.. பருத்தி செடிகள் மீது படர்ந்திருக்கிறது- வைகோ
சென்னை: கலிங்கப்பட்டிக்கும் வெட்டுக் கிளிகள் படையெடுத்து வந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், கலிங்கப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படை, பருத்திச் செடிகளின் மேல் படர்ந்துள்ளன.இதுகுறித்து, விவசாயிகள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
வேளாண்துறை அதிகாரிகள் நேற்று வருகை தந்து ஆய்வு செய்தனர். இவை, பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல; அச்சப்படத் தேவை இல்லை என்று கூறி உள்ளனர்.
இது தொடர்பாக, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அவர்களுடன் பேசினார். ஆட்சியர் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், தமிழக அரசின் விவசாயத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார். பிடிபட்ட வெட்டுக்கிளிகளை எடுத்துக்கொண்டு விவசாயிகள், இன்று மாலை தென்காசி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கின்றனர்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications