மதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி மீண்டும் வைகோ! 30 ஆண்டுக்காலம் கட்சியை கட்டிக்காத்த பெருமை!
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக போட்டியின்றி மீண்டும் வைகோ தேர்வாவது உறுதியாகிவிட்டது. இது குறித்த அறிவிப்பு நாளை மறுநாள் முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுகவில் ஒன்றிய, பேரூர், நகரம், மற்றும் மாவட்ட அளவிலான பதவியிடங்களுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் வைகோவை எதிர்த்து போட்டியிட யாரும் விருப்பமனு கொடுக்கவில்லை.

மதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் ஜூன் 1ஆம் தேதி மாலைக்குள் மதிமுக தலைமைக்கழகத்தில் விருப்பமனு கொடுக்க வேண்டும். பிற்பகல் 3 மணி நிலவரப்படி வைகோவை எதிர்த்து யாரும் விருப்பமனு கொடுக்காததால் மதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி மீண்டும் வைகோ தேர்வாவது உறுதியாகிவிட்டது.
கடந்த 30 ஆண்டுகாலம் மதிமுகவை கட்டிக்காத்த வைகோவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரையே போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் மதிமுக நிர்வாகிகள். மதிமுக தொடங்கிய போது இருந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், திருச்சி செல்வராஜ், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் ஒரு கட்டத்தில் மதிமுகவிலிருந்து விலகி திமுக, அதிமுக என சென்றுவிட்டனர்.
2 நாட்களுக்கு முன்னர் கூட மதிமுக அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி மீண்டும் உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியே மிஞ்சும் என்பதால் தாமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார். தனது 30 ஆண்டுகால மதிமுக பயணத்தில் பலர் வெளியேறுவதும்,ம் பலர் புதிதாக இனைவதும் சகஜம் என்பதால் அதைப்பற்றி வைகோ அலட்டிக்கொள்ளவில்லை.
தனது தளகர்த்தர்கள் ஒவ்வொருவராக தன்னை விட்டு பிரிந்தும் மனம் தளராமல் தொண்டர்கள் படையை கட்டுக்கோப்புடன் நடத்தி தமிழக அரசியலில் தனக்கென தனி தடம் பதித்துவிட்டார் வைகோ. இதனிடையே 5வது முறையாக வைகோ மதிமுக பொதுச்செயலாளராவதால் அதனை அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications