தென்னகம் மட்டும் மும்மொழிச் சுமைதாங்கி மூச்சு வாங்க வேண்டுமா? இருமொழிக் கொள்கையே போதும்- வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரு மொழி கொள்கையால்தான் தமிழர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறார்கள், மூன்றாம் மொழி எதற்கு என கவிப்பேரரசு வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் புத்தகக் கண்காட்சியில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

vairamuthu hindi imposition tamil nadu

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
மு.பிரதாப் இ.ஆ.ப அவர்களின்
அழைப்பின் பேரில்
புத்தகக் காட்சியின்
நிறைவு விழாவுக்குச் சென்றிருந்தேன்

பொதுமக்களும் மாணவர்களும்
பின்னிக் கலந்த பெருங்கூட்டம்

"இருமொழிக் கொள்கையால்தான்
தமிழர்கள் தமிழ்நாடில் வளர்ந்திருக்கிறார்கள்;
இந்தியாவிலும், உலகமெங்கும்
பரவியிருக்கிறார்கள்

தாய்மொழி கற்றால்
அன்னை நாட்டில் வெற்றி;
ஆங்கிலம் கற்றால்
அகிலத்தில் வெற்றி

இரண்டு பூனைகள் வளர்ப்பவன்
பூனைகள் வருவதற்கு
கதவில் இரண்டு ஓட்டைகள் போட்டாலே போதுமானது;
அதில் எந்தப் பூனையும்
உள்ளே நுழைந்து வரும்
மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு?

வடநாட்டு மாணவர்கள்
ஒரு மொழியில்
உலகத்தை முடித்துக்கொள்ளத்
தென்னகம் மட்டும்
மும்மொழிச் சுமைதாங்கி
மூச்சுவாங்க வேண்டுமா?

தாய்மொழிப் பற்றோடு
தமிழ்நாட்டில் நிமிருங்கள்
அயல்மொழி கற்று
அயல்நாட்டில் பரவுங்கள்

இருமொழிக் கொள்கையே
போதும்
அகிலம் அதற்குள் அடங்கும்

மூன்றாம் மொழி கற்பது
தேவையின் அடிப்படையில்
இருக்கட்டும்;
திணிப்பின் அடிப்படையில்
வேண்டாம்" என்று பேசினேன்

கையோடு வந்தவர்கள் எல்லாம்
கைதட்டினார்கள்

இவ்வாறு வைரமுத்து தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது மும்மொழியை திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை ஏற்க தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் மறுக்கிறது. இதனால் கல்வித் துறைக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை தராமல் நிலுவையில் வைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது, அதனால் நிதியை தர மறுக்கிறோம் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவத்தின் போதே வைரமுத்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த அந்த பதிவில்

இந்தி என்ற மொழி
தன்னளவில் இயங்குவது
அதன் உரிமை

இன்னொரு
தேசிய இனத்தின் மீது
திணிக்கப்படும்போது
அது புல்லுருவிபோல்
உள்ளிருந்து
தாய்மொழியின்
உயிரை உறிஞ்சிவிடும்

இந்தியின்
ஆதிக்கம் அதிகமான
மராத்தி போன்ற மொழிகளுக்கு
நேர்ந்த கதி அதுதான்

தமிழுக்கும்
அது நேர்ந்துவிடக்கூடாது
என்றுதான்
மும்மொழிக் கொள்கையை
மும்முரமாய் எதிர்க்கிறோம்

மும்மொழிக் கொள்கையை
ஏற்றால்தான் நிதிதருவோம்
என்பது
விஷத்தைச் சாப்பிட்டால்தான்
சோறு போடுவோம்
என்பது போன்றது
ஏற்றுக்கொள்ள முடியாது

தமிழ்நாட்டு அரசின்
நிலைப்பாட்டோடு
தமிழர்கள் கெட்டியாக
ஒட்டி நிற்கிறார்கள்
அறிஞர் அண்ணாவும்
உடன் இருக்கிறார்

இவ்வாறு வைரமுத்து தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+