"போய் வாருங்கள் நல்லவரே.. தாமரை மட்டுமல்ல.. சூரியனும் துக்கம் கேட்கிறது”.. வைரமுத்து உருக்கம்!
சென்னை: "போய் வாருங்கள் நல்லவரே.. தாமரை மட்டுமல்ல.. சூரியனும் துக்கம் கேட்கிறது." எனக் குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் வெள்ளிக்கிழமை மாலை காலமான நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, யாரையும் புண்படுத்தாத பண்பட்ட அரசியல் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

இதுதொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
நாகாலாந்து ஆளுநர்
இல.கணேசன்
அவர்களின் மறைவு
துயரம் தருகிறது
யாரையும் புண்படுத்தாத
பண்பட்ட அரசியல் தலைவர்
பாரதிய ஜனதா கட்சியில்
ஓர் இலக்கியவாதி
ஆன்மிக இலக்கியம்
வளர்ப்பதற்காகவே
பொற்றாமரை என்ற
களம் கண்டவர்;
என்னையும் அழைத்துப்
பேசவைத்தவர்
நாகாலாந்து வாருங்கள்
காணாத இயற்கை கண்டு
கவிதை எழுதலாம் என்று
ஆசையோடு அழைத்தவர்
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாட்டில்
அவரது உரையின்
திறம்பற்றிச் சொல்லிக்
கரம்பற்றிப் பாராட்டினேன்
மறைவு எதிர்பாராதது
போய் வாருங்கள் நல்லவரே
தாமரை மட்டுமல்ல
சூரியனும் துக்கம் கேட்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
எமர்ஜென்சி நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர். மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர் இல. கணேசன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது மதிப்பு கொண்டிருந்தவர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, இல.கணேசன் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராகத் திகழ்ந்தார் இல. கணேசன். இல.கணேசன் மறைவையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications