“ஏவிஎம் சரவணன் கையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. கண்ணில் நீர் முட்டியது”.. வைரமுத்து உருக்கம்!
சென்னை: மறைந்த சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. "எரி மேடையில் ஏவிஎம் சரவணன் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது காசோலையில் கையொப்பமிட்ட அவர் கையையே பார்த்துக் கொண்டிருந்தேன்; கண்ணில் நீர் முட்டியது" எனத் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
தமிழ் சினிமா துறையின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் நூற்றுக்கணக்கான வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. ஏவி மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் கவனித்து வந்தார். இவரது தலைமையில் பல வெற்றிப் படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம்.

வயது மூப்பு காரணமாக உடலில் சில பிரச்சனைகளுடன் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 86. கடந்த இரு ஆண்டுகளாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த ஏவிஎம் சரவணன் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைந்தார்.
ஏவிஎம் சரவணன் உடல் வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த், வைரமுத்து, பாக்யராஜ், சிவக்குமார், சூர்யா, இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சென்னை வடபழனி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
நேற்றோடு முடிந்துவிட்டது
ஏவி.எம்.சரவணன் அவர்களின்
பெளதிக வாழ்க்கை
இனி
நினைவின் வெளிகளில்தான்
அவரைச் சந்திக்க முடியும்
ஒரு சம்பவம் சொல்கிறேன்:
சிவாஜி படத்திற்குப்
பாட்டெழுதியதற்கு ஊதியமாக
எனக்கொரு காசோலை கொடுத்தார்
காசோலைகளை நான்
பிரித்துப் பார்ப்பதில்லை;
பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்
சில வாரங்களுக்குப் பிறகு
வேறொரு பாட்டுப் பதிவுக்காக
ஏவி.எம் கலைக்கூடத்திற்குள்
நுழைகிறது என் கார்
தன் அறையின்
கண்ணாடி வழியே
என் காரைப் பார்த்த
சரவணன் அவர்கள்
வீடு திரும்பும்போது
தன்னைப் பார்த்துச் செல்லும்படி
சொல்லியனுப்பினார்; சென்றேன்
கையில் ஓர் உறை வைத்திருந்தார்;
நான் குழப்பமானேன்
அவர் சொன்னார்:
"போனவாரம் சிவாஜிக்கு
வாலி ஒரு பாட்டெழுதினார்.
உங்களுக்குக் கொடுத்த
ஊதியத்தையே
அவருக்கும் கொடுத்தோம்;
அவரோ மேலும் ஒரு லட்சம்
வேண்டுமென்று கேட்டார்;
கொடுத்துவிட்டோம்.
அவர் சென்றபிறகு யோசித்தோம்;
வாலியோடு ஒப்பிடுகிறபோது
உங்களுக்குக் குறைத்துக்
கொடுத்திருக்கிறோமே;
அது நீதியில்லையே; ஆகவே
வாலிக்குக் கொடுத்த தொகையை
உங்களுக்கும் கொடுப்பதென்று
முடிவெடுத்தோம்;
அதுதான் இந்தத் தொகை.
இதில் ஒரு லட்சம் இருக்கிறது
பெற்றுக்கொள்ளுங்கள்" என்று
எழுந்து நின்று வழங்கினார்
நான் பெற்றுக்கொண்டு
"இரண்டாம் நன்றி உங்களுக்கு;
முதல் நன்றி வாலிக்கு" என்றேன்
'ஏன்' என்றார்
"என் சம்பளத்தை
உயர்த்தியவர் அவர்தானே;
வாலி; வாழி" என்றேன்
வாய்விட்டுச் சிரித்தார்
அந்தச் சிரிப்பையும் சேர்த்தல்லவா
நேற்று மின்மயானம் எரித்துவிட்டது
எரி மேடையில்
உடல் கிடத்தப்பட்டிருந்தபோது
காசோலையில் கையொப்பமிட்ட
அவர் கையையே
பார்த்துக்கொண்டிருந்தேன்;
கண்ணில் நீர் முட்டியது
இவ்வாறு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications