சமூக நீதியை கட்டமைத்த பெரியார் வரலாற்றின் வார்த்தைகளால் உச்சரிக்கப்படுவார்.. வைரமுத்து கவிதை
சென்னை: தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதி அதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்
சமூக நீதி என்பது
பேதங்களைப் பேணுவதன்று;
பேதங்கள் நீங்கப்
பாலங்கள் அமைப்பது
சமூக நீதியைக்
கட்டமைத்த பெரியாரும்
அவர் பிறந்த நாளைச்
'சமூக நீதி நாள்' என்று
அடையாளப்படுத்திய
முதல்வர் மு.க.ஸ்டாலினும்
வரலாற்றின் வார்த்தைகளால்
உச்சரிக்கப்படுவார்கள்
என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இவரது கவிதையை பாராட்டி நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை ட்வீட்டாக பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு வலைஞர்"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" மனிதனை மனிதனாக நினை என்று தெரிவித்துள்ளார்.

இனத்தால் மதத்தால் மொழியால் மக்கள் பேதமின்றி இணைக்கப்படுவதுதான் சமூகநீதி! ஒரு நாட்டின் அமைதி நிலையே அதன் உண்மையான வளம் வளர்ச்சி! நம்முள் எழும் பேதங்களை பிணக்குகளை எவ்வித தாட்சண்யமுமின்றி அற்றுப்போகச் செய்து,கருப்பையும் சிகப்பையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து இணக்கமாக்கியவர் பெரியார்!

பகுத்தறிவுப் பகலவனுக்கு சமூகநீதி நாள் வாழ்த்துக்கள். இவ்வாறு நெட்டிசன்கள் பெரியாரின் பிறந்தநாளில் அவரது புகழை பரப்பி கொண்டாடி வருகிறார்கள்.
பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழா இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அண்மையில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழியும் ஏற்கப்படுகிறது.
பெரியாருக்கு ரூ 100 கோடியில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் 100 கோடியில் எதற்கு சிலை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையிலேயே பெரியாரின் புகழை சட்டசபையில் உரைத்த ஸ்டாலின், அவரது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications