"சைவம் கலங்குகிறது.. சமயத் தமிழ் மயங்குகிறது.." மதுரை ஆதீனம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!
சென்னை: சைவம் கலங்குகிறது, சமயத் தமிழ் மயங்குகிறது என மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து வெளியிட்ட இரங்கற்பாவில்,

போற்றுதலுக்குரிய
மதுரை ஆதீனம்
அருணகிரிநாதர் மறைவு
ஆழ்ந்த கவலை தருகிறது.
சைவம் கலங்குகிறது
சமயத் தமிழ் மயங்குகிறது
அவர் போன்றதோர் ஆளுமை
எழுந்தருளுவது கடிது
ஆதீனங்களும்
மெய்யன்பர்களும்
அமைதியுறுக
அவர்தம் நினைவுகள்
நீடு துலங்குக.
என தனது இரங்கல் செய்தியில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக் குறைவால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
எனினும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆதீனத்திற்கு மடாதிபதியாக 292 பேர் இருந்துள்ளார்கள். இதில் 292ஆவது மடாதிபதி அருணகிரிநாதர் ஆவார். இவரை 292 ஆவது குருமகா சன்னிதானம் என்றும் அழைப்பார்கள்.












Click it and Unblock the Notifications