தமிழில் பேசக்கூடாதென ரயில்வே உத்தரவு.. கவிதை நடையில் கவிஞர் வைரமுத்து கடும் எச்சரிக்கை
சென்னை: ஆங்கிலம், இந்தி மொழி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ரயில்வே உத்தரவுக்கு கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மொழியின் குரல்வளையை பிடிக்க பார்க்கிறார்கள் என்றும், கலாசாரத்தை களவாட பார்க்கிறவர்கள், வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்த்த பணிகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் அலுவல் விஷயமாக ரயில்வே அதிகாரிகள் யாரும் தமிழில் பேச கூடாது என்றும் தெற்கு ரயில்வே சார்பில் சுற்றறிக்கை அனுப்ப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரு பயணிகள் ஒரே பாதையில் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் ஏற்பட்ட மொழிப்பிரச்னை தான் காரணம் என தெரியவந்தது.
இதையடுத்து தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர்கள், ரயில் இயக்குபவர்கள் உள்பட ரயில் இயக்க பணியாளர்கள் அனைவரும் அலுவல் சார்ந்த பணிகளுக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்றும் தமிழில் எக்காரணம் கொண்டும் பேசவேண்டாம் என்றும் தெற்கு ரயில்வே நேற்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கியா போல்தாஹே ரயில்வே ஜி... உங்க யோசனையில்... கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லையே!
இதற்கு திமுக, இடதுசாரிகள், திக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளன. தெற்கு ரயில்வேயை கண்டித்து திமுகவினர் போராட்டமும் நடத்தினர் இந்நிலையில் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம்.
ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது
ஆட்டின் குரல்வளையைத்தான்.
கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள்
மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.
வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு" என இவ்வாறு கூறியுள்ளார்.