கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து
சென்னை: கருணாநிதியின் இறுதி காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாகத்தான் வைத்திருந்தார் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவும் இதற்கு கவிதை வடிவில் பதில் அளித்துள்ளார். கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்ற அரசியல் கூற்று உண்மைக்கு மாறானது என அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் நாலாபுறமும் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தருமபுரியில் பிரசாரம் மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் பதில்
அப்போது பேசிய எடப்பாடி, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் வெள்ளைக் குடையுடன் போனவர்தான் ஸ்டாலின். தற்போது இரட்டை வேடம் போடுகிறார். நாங்கள் அதிமுகவை விற்கவில்லை. நீங்கள்தான் காங்கிரஸ் கட்சியிடம் திமுகவை விற்பனை செய்துவிட்டீர்கள். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போதே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நம்மை பற்றி பேசலாமா?
கருணாநிதியின் இறுதி காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாகத்தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார் என ஒரு ஆடியோவில் தகவல் வந்தது என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு நெல்லையில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், "கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி நாக்கில் நரம்பில்லாமல் பொய் பேசுகிறார் என பதில் அளித்து இருந்தார்.
உண்மைக்கு மாறானது
அவர் கூறுகையில், "அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ள எடப்பாடி, தேர்தல் தோல்வி பயத்தால் எல்லை மீறிப் பேசி வருகிறார். எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞரை, நானே வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக நாக்கில் நரம்பின்றி அவர் உளறுவது கடும் கண்டனத்திற்குரியது. முதல்வர் என்ற முறையில் எனது செயல்பாடுகளை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.. ஆனால், முத்தமிழறிஞர் கலைஞரைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்ற அரசியல் கூற்று உண்மைக்கு மாறானது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:-
வைரமுத்து ட்வீட்
கடைசிக் காலத்தில்
கலைஞர்
சிறைப்படுத்தப்பட்டிருந்தார்
என்ற அரசியல் கூற்று
உண்மைக்கு மாறானது
அதற்கு
நானும் ஒரு சாட்சி
கலைஞரின் உடல்நிலை
மருத்துவத்தின் கைகளுக்கு
மாறிவிட்டது
முதுமை - நோயுடைமை
தொண்டைத் துளை
பேச்சின்மை
மருந்துகளின் தாக்கம்
போன்ற காரணங்களுக்காக
மருத்துவர்களின் அறிவுரையைத்
தளபதி மு.க.ஸ்டாலின்
கவனமாகப் பின்பற்றினார்
நோய்த்தொற்றைத் தடுக்கவே
பார்வையாளர்கள்
ஒழுங்குபடுத்தப்பட்டனர்
அவர் ஆயுளை நீட்டிக்கவே
கட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டன
வாரம் ஒருமுறை
அல்லது இருமுறை
நான் கலைஞரைச்
சந்திக்கும் வாய்ப்பை
யாரும் தடுக்கவில்லை
மென்மையாய்;
மிக மென்மையாய்
அவர் கையாளப்பட்டார்
கலைஞர் இரண்டாம்
குழந்தை நிலையில் இருந்தார்
தொட்டில் என்பது
ஒரு குழந்தைக்குச்
சிறையாகிவிடாது
தந்தையைப் பிள்ளைபோல்
பாதுகாத்தார் தளபதி
தந்தையை அவர்
சிறையில் வைக்கவில்லை;
சிறகில் வைத்திருந்தார்
தமிழர்கள் அறிவார்களாக" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications