பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வைரமுத்து பாடல் வரியை மாற்றி அவருக்கே அனுப்பிய நெட்டிசன்ஸ்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை மாற்றி, அதை அவருக்கே ரசிகர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒன்றும் சொல்ல முடியாத அளவுக்கு எக்குத்தப்பாய் எகிறி வருகிறது. தற்போது, கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கடந்த 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெட்ரோல் - டீசல் விலையும் தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.45 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதிகபட்சமாக இந்தூரில் 97.35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அவர் 'இயற்கை எனும்' படத்தில் எழுதிய, 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்' என்ற பாடலை லைட்டாக உல்டா செய்து அவருக்கே ரசிகர்கள் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து வைரமுத்து இன்று தனது ட்விட்டர் பதிவில், "என் பாட்டு வரியை மாற்றி
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்'
#PetrolDieselPriceHike
என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள், இந்த காலத்தில் உங்களை இந்தப் பாடலை எழுத சொல்லி இருந்தால், நீங்களும் இப்படித்தான் தான் எழுதியிருப்பீர்கள் என்று பதிலளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications