வள்ளுவர் மறை.. வைரமுத்து உரை! அனைவரும் வாருங்கள்.. கவிப்பேரரசு அழைப்பு!
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய 'வள்ளூவர் மறை, வைரமுத்து உரை' எனும் நூல் நாளை வெளியாக இருக்கிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார். இந்நிலையில் வைரமுத்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக பொதுமறையாக விளங்கும் திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், திரு.வி.கல்யாணசுந்தரனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேய பாவாணர், நாமக்கல் கவிஞர், மு.வரதராசனார், புலவர் குழந்தை, சி.இலக்குவனார், கருணாநிதி, நெடுஞ்செழியன் ஆகியோர் வரிசையில் தற்போது வைரமுத்தும் இடம் பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவின் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியிருந்த வைரமுத்து, திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது அதை முழுமையாக எழுதி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த நூல் எப்படி இருக்கும் என்பதற்கான விளக்கத்தை வீடியோ மூலம் வைரமுத்து வெளியிட்டிருந்தார்.
அதில், "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின், என்கிற 969வது குறளுக்கு காலங்காலமாக ஒரு பிழைப்பட்ட பொருளே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 'கவரி மான்' என்று பொருள் கொண்டு ஒரு மயிர் உதிர்ந்து விட்டாலும், கவரி மான் இறந்துவிடும். அதுபோல, மானத்தை இழந்தவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் என்பது சொல்லப்பட்டு வந்த பொருள்.
ஒரு மயிர் உதிர்வது என்பது எந்த விலங்குக்கும் எளிதான விஷயம்தான். அது வளர்சிதை மாற்றம்தான். ஒரு மயிர் உதிர்வதால் எந்த விலங்கும் இறந்துவிடுவதாக அறிவியல் கூறவில்லை. இந்த குறளுக்கு நேரிய பொருள், அறிவியல் கூறிய பொருளை எழுதியுள்ளேன்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
இந்த குறளில் 'கவரி மா' என்பதுதான் பொருளே தவிர, கவரி மான் என்பது அல்ல. சொல்லாட்சி, கவரி மா என்றுதான் இருக்கிறது. மா என்றால் விலங்கு. உடலில் கற்றை முடியை கவரியாக கொண்டு குளிரை தாங்கிக்கொண்டிருக்கும் பனி நாட்டு விலங்கு. அந்த கற்றை முறை முழுவதும் விழுந்துவிட்டால் குளிர் தாங்காமல் அந்த விலங்கு இறந்துவிடும்.
அதுபோல மானமுள்ள உயர்ந்த சான்றோர், தங்கள் மானத்திற்கு இழுக்கு நேர்ந்துவிடின் இறந்துவிடுவர் என்று எழுதியிருக்கிறேன். அறிவுலகம் இதை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் நாளை நூல் வெளியிட்டு விழா நடக்கிறது. இதற்கு முதலமைச்சர் வருகை தருகிறார். எனவே அனைவரும் வர வேண்டும் என்று வைரமுத்து அழைப்பு விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications