நெஞ்சு நிறைகிறேன்.. அப்பாவின் சட்டைக்கு ஆசைப்படும் குழந்தை! கலைஞர் நினைவிடத்தில் உருகிய வைரமுத்து
சென்னை: கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது நினைவிடத்தில் புத்தகத்தை வைத்து வணங்கிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக கவிப்பேரரசாக கோலோச்சி வருபவர் வைரமுத்து. தேனியில் வடுகப்பட்டி கரிசல் காட்டில் பிறந்த கவிதை முத்து இந்த வைரமுத்து. இலக்கணங்களில் திளைத்து கிடந்த தமிழ் திரை உலகில் இலக்கியத்தோடு கலந்த எளிய நடை கவிகளால் பாட வைத்தவர்.
1980 ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த அவர் கவிஞராக இன்றி, கவிப்பேரரசாக 45 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருகிறார். பட்டி தொட்டி எங்கும் வைரமுத்துவின் பாடல் வரிகள் இன்றளவும் ஒலித்து வருகிறது.

பழந்தமிழையும் செந்தமிழையும் கலந்து திரைப்பட பாடல்களாக மாற்றி சாதாரண ரசிகனையும் கவி பாட வைத்தவர். இதுவரை 7500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி ஏழு முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல விருதுகள் அவரது பேனாவின் பெருமையை பறைசாற்றின. கவிஞராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் பரிணமித்தவர் கவிப்பேரரசு. கள்ளிக்காட்டு இதிகாசிமும், கருவாச்சி காவியமும் அவரது வைர கிரீடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கங்கள். அதுமட்டுமல்லாமல் நாவல்கள், கவிதை, தொகுப்புகள் என 35க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருக்கிறார்.
இந்த நிலையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார் வைரமுத்து. 'வள்ளுவர் மறை வைரமுத்து உரையும்' என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் திருக்குறளுக்கான விளக்க உரை இன்று வெளியாகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கும் நிலையில், இந்த நூலை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிலையில், வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் வெளியீட்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார். அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வைத்து பூத்தூவி மரியாதை செலுத்திய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் வைரமுத்து.
முத்தமிழறிஞரே!
— வைரமுத்து (@Vairamuthu) July 13, 2025
முதல் தமிழாசானே!
‘வள்ளுவர் மறை
வைரமுத்து உரை’ நூலை
உங்கள்
நினைவிடம் சேர்க்கிறேன்;
நெஞ்சு நிறைகிறேன்
அப்பாவின் சட்டையை
அணிந்துகொள்ள ஆசைப்படும்
குழந்தையைப்போல
நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு
நானும் எழுதியிருக்கிறேன்
உரையாசிரியர் பட்டியலில்
சேர்வதைவிட
உங்கள்… pic.twitter.com/8ubQ4U1MoF
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," முத்தமிழறிஞரே! முதல் தமிழாசானே! 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூலை உங்கள் நினைவிடம் சேர்க்கிறேன்; நெஞ்சு நிறைகிறேன்.
அப்பாவின் சட்டையை அணிந்துகொள்ள ஆசைப்படும் குழந்தையைப் போல நீங்கள் உரை எழுதிய குறளுக்கு
நானும் எழுதியிருக்கிறேன். உரையாசிரியர் பட்டியலில் சேர்வதைவிட உங்கள் வரிசையில் சேர்வதில் உள்ளம் கசிகிறேன் வணங்குகிறேன்; என் பிறந்த நாளில் வாழ்த்துங்கள் என்னை" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications